மழை குறைந்ததால் மகிழ்ச்சி- மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் காரணமாக பெய்துவந்த மழை குறைந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இங்கு புயல் காரணமாக கடலின் சீற்றம் அதிகரித்து வந்தது. காற்றும் பலமாக வீசியதுடன் பலத்த மழையும் தொடர்ந்து பெய்தது.
இதனால் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட 33 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டது. புயலின் வேகம் எப்போது குறையும் என்று மீனவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஐந்து நாட்களுக்கு பிறகு புயலின் தாக்கம் குறைந்துள்ளதாலும் மழை நின்று போனதாலும் சுமார் 1500 நாட்டு படகுகள், மற்றும் விசை படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் கடற்கரை பகுதி மீண்டும் உற்சாகமானது.
புயலின் தாக்கம் குறைந்து போனதால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வந்த மழையும் நின்றுள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.