வெளி மாவட்டத்தினர் நெடுவாசலை விட்டு வெளியேற வேண்டும்: டிஆர்ஓ திடீர் உத்தரவு
நெடுவாசல் போராட்டக்களத்தில் இருந்து வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு போராட்டக்குழுவினரிடம் டிஆர்ஒ கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுக்கோட்டை : ஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசல் மக்கள் போராடி வரும் நிலையில் போராட்டக்களத்தில் இருந்து வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேறு போராட்டக் குழுவினரிடம் டிஆர்ஒ ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
நெடுவாசல் போராட்டக்குழுவினர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் டிஆர்ஓ ராமசாமி கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்தப் பகுதியில் கடந்த 16ஆம் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடனும் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வோம் என்று கூறி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நெடுவாசலை அடுத்த புல்லான் விடுதியில் போராட்டக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தீவிரமடைந்துள்ளது. கொட்டும் மழையிலும் போராட்டம் நடைபெற்றது.
அரசியல் கட்சித்தலைவர்கள் இன்று நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா இன்று நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் டிஆர்ஓ ராமசாமி இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்ட ஆட்சியரை சந்திக்க வருமாறு போராட்டக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.
மத்திய அரசுடன் பேசுவதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ தயாராக இருப்பதாக டிஆர்ஓ தெரிவித்துள்ளார். போராட்ட களத்தில் இருந்து வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாளை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுடன் போராட்டக்குழு பேசவுள்ள நிலையில் டிஆர்ஓ பேச்சு வார்த்தை நடத்தினர். சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் நெடுவாசலுக்கு வருவார்கள் என்பதால் இருப்பவர்களையும் அப்புறப்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது.