ஓடு ஓடு ஹைட்ரோகார்பனே ஓடு.. போடு போடு தீர்மானம் போடு! அரசுக்கு எதிராக திரண்ட மக்கள்! #saveneduvasal
ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அரசு எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை : சட்டமன்றத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து செய்யப்படும் அவசர தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று புதுக்கோட்டை போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நெடுவாசலில் திட்டமிடப்பட்டுள்ள பூமியை துளையிட்டு எடுக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய நிலங்களை பாதிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 70 கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தடை செய், தடை செய் மீத்தேனை தடை செய் வாழவிடு வாழவிடு விவசாயியை வாழவிடு, அடிக்காதே அடிக்காதே விவசாயி வயிற்றில் அடிக்காதே என்று கோஷங்களை எழுப்பினர். 5 ரூபாய் பேனா, ஏசிஆர் ரோடு மீத்தேனே ஓடு, வேண்டாம் வேண்டாம் ஹைட்ரோகார்பன் வேண்டாம், வேண்டும் வேண்டும் விவசாயம் வேண்டும். ஓட்டு போட்ட தப்பா, மத்திய அரசு சொன்னா தான் கேட்பீயா என்பது போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
மேலும் மாநில அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னாலும், அதில் நம்பிக்கை இல்லை என்று போராட்டக்காரர்கள் கூறினர். மத்திய அரசும் இந்தத் திட்டம் வேண்டாம் என்று தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக கேட்கவில்லை என்று கூறும் நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம் என்று சட்டமன்றத்தில் அவசர தீர்மானம் போட்டு அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர் .