காதல் பிரச்சினை... சென்னை அருகே புரட்சி பாரதம் நிர்வாகி வெட்டிக் கொலை
சென்னை: காதல் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாம்பரம் அருகே புரட்சி பாரதம் நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொலையான நபரின் பெயர் ராஜா (37) என்பதாகும். இவர் தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் பேரூராட்சி சாலையில் வசித்து வந்த ராஜா புரட்சி பாரத மாவட்ட அமைப்பாளராகவும் இருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், பிரியா (18), பிரதீபா, பிரியதர்ஷினி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்.
ராஜாவின் மகள் பிரியாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமாரின் மகன் லோகேசுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவருவரின் காதலால் இரு வீட்டாருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக 2 மாதத்திற்கு முன்பு ராஜாவிற்கும், சம்பத்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சம்பத்குமாரை ராஜா வெட்டினார். இதனையடுத்து பீர்க்கங்கரணை போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் வீட்டு அருகே உள்ள ஹோட்டலில் ராஜா சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ஹோட்டலுக்குள் புகுந்தனர். ஓட்டல் உரிமையாளர் குமார் உள்பட ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி வெளியேற்றினர். பின்னர் ராஜாவை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் பயங்கரமாக வெட்டியது. உடல் முழுவதும் வெட்டு காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த ராஜா சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் கொலைக் கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றது.
சம்பவ இடத்திற்கு வந்த பீர்க்கங்கரணை போலீசார் ராஜாவின் உடலை கைப்பற்றி குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காதல் பிரச்சினையில் ராஜாவிற்கும், சம்பத்குமாருக்கும் இடையே நடந்த மோதலின் தொடர்ச்சியாக இந்த படுகொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கொலையாளிகள் கூலிப்படையா? அல்லது சம்பத்குமாரின் உறவினர்களா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த ஓட்டல் போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.