'கக்கூஸ்' ஒரு சமூகத்தை இழிவுபடுத்துகிறது.. திவ்யபாரதி மீது புதிய தமிழகம் கட்சியினர் போலீசில் புகார்
கக்கூஸ் ஆவணப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக உள்ளது என்று புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் புகார் அளித்துள்ளார்.
சென்னை: கக்கூஸ் ஆவணப்படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக உள்ளது என புதிய தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கர் மதுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கையால் மலம் அள்ளும் கொடுமை குறித்து கக்கூஸ் எனும் ஆவணப்படத்தைச் சமூக ஆர்வலர் திவ்யபாரதி அண்மையில் இயக்கி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் ஆஜராகாமல் இருந்ததால் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் திவ்ய பாரதி, கக்கூஸ் ஆவணப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுப் படுத்தி காட்டியிருப்பதாகக் கூறி புதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் பாஸ்கரன் மதுரம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
முன்னதாக, மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திவ்ய பாரதி, தனக்கு பாஜக மற்றும் புதிய தமிழகம் கட்சிப் பிரமுகர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.