ஊதிய உயர்வு வேண்டி... ‘கடலில் குதிக்கும்’ போராட்டத்தில் ஈடுபட்ட புதுவை தொழிலாளர்கள்!
புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் கடலில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ஒதியம்பட்டியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலை ஊழியர்கள், ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு, மருத்துவப் பரிசோதனை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தினர்.
ஆனபோதும், தொடர்ந்து தோல் தொழிற்சாலை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கடலில் குதிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து கடற்கரைக்கு விரைந்து வந்த போலீசார், கடலில் குதிக்க முற்பட்ட தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து கடற்கரையில் கொட்டப்பட்டிருந்த கற்கள் மீது அமர்ந்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் குறித்து தொழிலாளர்கள் தரப்பில் கூறுகையில், ''36 ஆண்டுகளாக நடந்து வரும் இந்தத் தொழிற்சாலை எங்கள் மீது அக்கறை காட்ட மறுக்கிறது. எங்களுக்கு சம்பளப் பிரச்சினை இருக்கிறது.
இந்த தொழிற்சாலையில் வேலை செய்த 13பேர் உயிரிழந்தனர். முறையான மருத்துவப் பரிசோதனை இல்லாததே இதற்குக் காரணம். மருத்துவப் பரிசோதனை குறித்து நாங்கள் கேள்வி எழுப்பியும் அரசும், தொழிற்சாலையும் கண்டுகொள்ளவே இல்லை.
இதில் 500குடும்பங்களை சார்ந்தவர்கள் வேலை செய்கிறார்கள். எங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற அரசு இதில் தலையிடவேண்டும்'' என்றனர்.
இதையடுத்து காவல் கண்காணிப்பாளார், சட்டசபை உறுப்பினர் ஆகியோர் போராட்டம் நடக்கும் இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபை உறுப்பினரும், காவல் கண்காணிப்பாளரும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.