ஆர்.கே. நகர் வேட்பாளர் யார்? குழப்பத்தில் மநகூ.. மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு
சென்னை: மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்கள் திருமாவளவன், முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் சென்னை தியாகராயர் நகரில் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், தங்களது முடிவு குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி உடல் நலமின்றி மரணம் அடைந்தார். இதனையடுத்து, ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 6 மாதத்திற்குள் ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்நிலையில், வரும் 12ம் தேதி ஆர்.கே. நகரில் இடைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதிமுகவில் உள்ள ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணியினர் தங்களுக்கான வேட்பாளர்களை முடிவு செய்ய தயாராகிவிட்டனர். திமுகவும் வேட்பாளர் யார் என்பது குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் ஆர்.கே. நகரில் போட்டியிடுவது என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் அந்தக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஎம், சிபிஐ ஆகிய மூன்று கட்சிகளில் எந்தக் கட்சி தேர்தலில் போட்டியிடப் போகிறது என்பது குறித்த ஆலோசனை இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் தலைவர்கள் அளித்த பேட்டியில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது முடிவு குறித்து 3 அல்லது 4 நாட்களில் அறிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது ஆர்.கே. நகர் தொகுதி விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது. அதன் சார்பில் கல்வியாளர் வசந்தி தேவி வேட்பாளராக நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.