திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த ம.ந.கூ- வைகோ, திருமா இடையே கடும் மோதல்!
சென்னை : காவிரி விவகாரத்தில் திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மக்கள் நலக்கூட்டணியில் சலசலப்பு உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் இடையே கடும் மோதல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதை உறுதிபடுத்தும் விதமாகவே, விசிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் ஆலோசிப்பது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காவிரி பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வந்தன. ஆனால் அரசு அதற்கு முன் வரவில்லை. இந்த நிலையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 25ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பும் அனுப்பி இருக்கிறார். ஆனால் பாஜக, தேமுதிக, மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து விட்டன.
திருமாவளவன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். அதுபோல சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்று அரசியல்கட்சிகள் கோரிக்கை வைத்தன. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், ஆளும்கட்சி அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட முன்வராவிட்டால் எதிர்க்கட்சியான திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட முன் வரவேண்டும் என்று அறிவித்தார். இதுபற்றி ஸ்டாலினிடம் கேட்டபோது அது அவரது கருத்து என்று கூறினார்.
வைகோவின் கருத்து
இதனிடையே அக்டோபர் 25ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க திமுக சார்பில் அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளார் ஸ்டாலின். இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளரைச் சந்தித்த வைகோ, இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். திமுக கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டம் நாடகம். அதில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகள் கலந்து கொள்ளாது என்று வைகோ கூறினார். திமுக கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு ஏமாற்று வேலை, இது பங்கேற்பது உசிதமல்ல என்றுதான் நான்கு கட்சி தலைவர்களும் கூடி முடிவுக்கு வந்துள்ளோம் என்றும் வைகோமேலும் தெரிவித்தார்.
அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்?
மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கூறும்போது, காவிரி பிரச்சினை கொளுந்து விட்டு எரிந்த போது தி.மு.க. கண்டு கொள்ளவில்லை. இப்போது திடீரென்று இப்படி அறிவித்து இருப்பது அரசியல் நாடகம். நாங்கள் ஏற்கனவே 3 தொகுதி தேர்தலிலும் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளோம். 25ம்தேதி அனைத்து கட்சி கூட்டமாம். மறுநாள் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்த சூழ்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மற்ற கட்சிகளை பங்கேற்க வைத்து எல்லா கட்சிகளும் தி.மு.க.வை ஆதரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிதான் இது என்பது சத்யாவின் கருத்தாகும்.
அரசியல் நாடகம்
ஒரு பக்கம் அனைத்து கட்சி கூட்டம் என்று அறிவித்துவிட்டு இன்னொரு பக்கத்தில் அதிமுக, பாமக, தேமுதிக, மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகளை சேர்ந்த 12 ஆயிரம் பேரை தங்கள் கட்சியில் சேர்க்கும் விழாவையும் மு.க.ஸ்டாலின் நடத்தி இருக்கிறார். இது என்ன அரசியல் நாகரீகம். இவர்கள் நடத்துவது அனைத்துக் கட்சி கூட்ட மல்ல. தி.மு.க.வின் தேர்தல் அரசியல் நாடகம் என்றும் மதிமுகவின் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுவின் நிலை இப்படியிருக்க விசிகவின் நிலை வேறாக இருக்கிறது. இதுவே வைகோ, திருமா இடையே பிளவு ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்து வேறுபாடு?
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று சொல்லவில்லை. காவிரி பிரச்சினை பொதுப்பிரச்சினை என்பதால் அனைத்துக் கட்சி கூட்டத்தை யார் கூட்டினாலும் பங்கேற்கலாம் என்ற கருத்தை மக்கள் நல கூட்டணியில் முன்வைத்தேன். மக்கள் நலக்கூட்டணியில் உள்ள பெரும்பான்மையில் அடிப்படையில் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார் திருமாவளவன்.
ஆலோசித்து முடிவு
25ம்தேதி அனைத்துக் கட்சி கூட்டம். மறுநாள் 3 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எங்கள் முடிவை திங்கட்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்றார் திருமாவளவன். அதேபோல கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் திருமாவளவன். இக்கூட்டத்தில் திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுடன் ஆலோசிப்பது என முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநகூட்டணியில் கருத்து வேறுபாடு
ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக வைகோ அறிவித்த முடிவை மீளாய்வு செய்வதற்காக மீண்டும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்தித்து பேசுவேன் என்று கூறியுள்ளார். அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக மக்கள் நலக்கூட்டணிக்குள் உள்ள தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.