ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அதிமுக போடும் நாடகம்.. வசைபாடும் வைகோ
நெல்லை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என்பது அ.தி.மு.க.வினர் நடத்தும் நாடகமாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட படுகொலை என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 6 மாதகாலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஊழல் பெருகிவிட்டது. திட்டங்களை செயல்படுத்தாத அரசாக தமிழக அரசு மாறிவிட்டது. இனிமேலாவது அனைத்து துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என்பது அ.தி.மு.க.வினர் நடத்தும் நாடகமாகும். இதனை யாரும் நம்ப வேண்டாம்.
இப்போது இடைத்தேர்தலை நடத்தினால் பொதுத்தேர்தல் வருகிற மே மாதம் நடைபெறும் என எதிர்க்கட்சிகளை நம்ப வைக்க நடக்கும் செயலாகும் இது.
வருகிற டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் தயாராக இருக்க வேண்டும் என்றார் அவர்.