ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - திமுக வேட்பாளர் மருதுகணேஷ்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக புதுமுகமான மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளராக புதுமுகமான மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுச்செயலாளர் அன்பழகன் இதனை அறிவித்துள்ளார். இவர் ஆர்.கே. நகரின் கிழக்குப் பகுதி செயலாளர்.
ஜெயலலிதா மறைவை அடுத்து காலியான ஆர்.கே. நகருக்கு இப்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேமுதிக, அதிமுக வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில் திமுக இன்று வேட்பாளரை அறிவித்தது.
நேர்காணல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு திமுக சார்பில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தியுள்ளார். ராயபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், காமராஜரின் உறவினர் மயூரி உள்ளிட்ட 17 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் முடிந்தும் வேட்பாளரை அறிவிப்பதில் திமுக தயக்கம் காட்டியது.
சிம்லா முத்துச்சோழன்
கடந்த முறை போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் முதல் ஆளாக விருப்பமனு வாங்கினார். நேர்காணலிலும் பங்கேற்றார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று பேசப்பட்ட நிலையில் மருதுகணேஷ் பெயரை அறிவித்துள்ளார் ஸ்டாலின்.
திமுக வேட்பாளர்
ஆர் கே நகரின் பகுதிச் செயலாளராக இருக்கும் மருதுகணேஷ் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மண்ணின் மைந்தன், புதுமுக வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ஆர்.கே. நகர் திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமான்ய வேட்பாளர்
அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் களமிறங்கியுள்ள நிலையில் புதுமுக வேட்பாளரை அறிவித்துள்ளது திமுக. இது டிடிவி தினகரனுக்கு எதிராக ஒரு சாமான்ய வேட்பாளரை அறிவித்துள்ளது.அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் பெயர் அறிவிக்கப்பட்ட சில நிமிட நேரங்களிலேயே மருதுகணேஷ் பெயரை திமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.