நான் மண்ணின் மைந்தன்.. அதிமுகவின் மக்கள் விரோத ஆட்சியை சொல்லி ஓட்டு கேட்பேன்: மருதுகணேஷ்
இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்த மண்ணின் மைந்தனாகிய நான் அதிமுகவின் மக்கள் விரோத ஆட்சியை சொல்லி ஓட்டுக் கேட்பேன் என்ற ஆர்.கே. நகரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியின் மண்ணின் மைந்தனாகிய நான் வெற்றி பெறுவது உறுதி என்று திமுக வேட்பாளர் மருதுகணேஷ் கூறியுள்ளார். அதிமுகவின் மக்கள் விரோத ஆட்சியை சொல்லி ஓட்டுக் கேட்பேன் என்றும் ஆர்.கே. நகரில் போட்டியிடும் மருது கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு திமுக சார்பில் விருப்பமனு கொடுத்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
ராயபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், காமராஜரின் உறவினர் மயூரி உள்ளிட்ட 17 பேர் நேர்காணலில் பங்கேற்றனர். பின்னர் இறுதி முடிவு எடுக்கப்பட்டு வேட்பாளராக மருது கணேஷ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுமுகம்
திமுக வேட்பாளர் ஆர் கே நகரின் பகுதிச் செயலாளராக இருக்கும் மருதுகணேஷ், மண்ணின் மைந்தர். புதுமுகமாக இருந்தாலும், அவருக்கு திமுக போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. இது ஆர்.கே. நகர் திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உற்சாக மருது கணேஷ்
இதுகுறித்து திமுக வேட்பாளர் மருதுகணேஷ் செய்தியாளர்களிடம், இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த எனக்கு இதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். மேலும், 40 ஆண்டுகளாக எங்கு என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து திமுகவிற்காக பணி செய்து வருகிறேன் என்றும் அவர் கூறினார்.
பிரச்சார வியூகம்
மேலும் அதிமுகவின் மக்கள் விரோத ஆட்சியை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை கேட்பேன். அதே போன்று திமுகவின் சாதனைகளை சொல்லி வாக்குகளைத் திரட்டுவேன் என்றும் மருது கணேஷ் கூறினார்.
ஆதரவாளர்களுக்கு நன்றி
ஆர்.கே. நகரில் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவளித்த கட்சிகளுக்கும் மருது கணேஷ் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். பத்திரிகையாளரான இவர் வடசென்னை தொகுதியின் அனைத்து பிரச்சனைகளையும் எதிர் கொண்டவர் என்பதால் கூடுதலாக மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.