ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27-ல் இடைத் தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு! ஜெ. போட்டியிடுகிறார்!!
சென்னை : சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஜூன் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். தற்போது எம்.எல்.ஏவாக இல்லாத ஜெயலலிதா அடுத்த 6 மாத காலத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும்.
இந்நிலையில், அண்மையில் சென்னை ஆர்.கே. நகர் அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டது.
இதனால் காலியாக உள்ள ஆர்.கே.தொகுதியில் வரும் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஜூன் 3ம் தேதி தொடங்குகிறது.
வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 10
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாள் ஜூன் 11
வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜூன் 13.
ஜூன் 27ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
இந்த வாக்குகள் ஜூன் 30-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியுடன் மேகாலயா, கேரளா, மத்திய பிரதேசத்தில் தலா ஒரு சட்டசபை தொகுதியிலும் திரிபுராவில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.