அம்மாவும்... ஆர்.நகர் தொகுதி இடைத்தேர்தலும்...
சென்னை: இடைத்தேர்தல் என்றாலே திருவிழா கோலம்தான்... அதுவும் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் இடைத்தேர்தல் என்றால் கேட்கவே வேண்டாம் கொடை திருவிழா போல கொண்டாடி விட மாட்டார்களா என்ன?
நீ மாஸ்னா நான் பக்கா மாஸ் என்கிற ரீதியில் இடைத்தேர்தல் திருவிழாவிற்கு தயாராகி வருகின்றனர் அதிமுக தொண்டர்கள். போட்டிக்கு எதிர்கட்சிகள் தயாராக இல்லை எனவே சுவர் விளம்பரம், ப்ளக்ஸ் என திரும்பிய பக்கம் எல்லாம் ஜெயலலிதா சிரிக்கிறார்.
இந்த இடைத்தேர்தல் ஜெயலலிதாவிற்காக நடைபெறும் இடைத்தேர்தல் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை அடுத்து எம்.எல்.ஏ, முதல்வர் பதவிகளை இழந்தார் ஜெயலலிதா. இதனையடுத்து காலியான ஸ்ரீரங்கம் தொகுதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடைத்தேர்தல் நடைபெற்றது.
முதல்வரான ஜெயலலிதா
சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை அடைந்த பின்னர் மீண்டும் முதல்வராக பதவியேற்றுள்ளார். முதல்வராக பதவியேற்றப்பின் 6 மாதத்துக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தான் ஒருவர் அப்பதவியில் நீடிக்க முடியும். எனவே, ஜெயலலிதா ஒரு வருடம் முழுமையாக பதவி வகிக்க ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும். இந்நிலையில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியை விட்டுத்தர தயாராக உள்ளதாக போட்டிபோட்டு அறிவித்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
ஜெயலலிதாவிற்காக ராதாகிருஷ்ணன் நகர் எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவசர வேகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் முதன்முறையாக போட்டியிடுகிறார் ஜெயலலிதா என்பதால் ஆர்.கே.நகர் களைகட்டியுள்ளது.
போட்டியிடாத திமுக
பிரதான எதிர்கட்சியான திமுக தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்து விட்டது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாளவனும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். பாஜக, காங்கிரஸ்,பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளின் முடிவுகள் அறிவிக்கப்படும் முன் வேட்புமனு தாக்கலே முடிந்து விடும்.
மூலவருக்கு மரியாதை
உற்சவ மூர்த்திகள் போட்டியிடும் இடைத்தேர்தல் என்றாலே அதிமுகவினரின் வேகத்தை சொல்லவே வேண்டாம். பணம் பாதாளம் வரை பாயும். இது மூலவராக ஜெயலலிதா போட்டியிடும் இடைத்தேர்தல் என்பதால் அதிமுகவினர் அசரடிக்கும் வகையில் தேர்தல் வேலைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
நெருங்கும் தேர்தல்
தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அதிமுகவினர் பம்பரமாக சுழன்று சுவர் விளம்பரங்களை எழுதி வருகின்றனர். இதனால் ஆர்.கே.நகரில் காணும் இடமெங்கும் ஜெயமயமாக இருக்கிறது.
கண்ணில் அம்மா
இன்றைக்கு அதிகம் மக்களை கவர்ந்த ப்ளக்ஸ் பேனர் ஜெயலலிதாவின் கண் போன்ற எழுத்தில் வரையப்பட்ட அம்மா பேனர்தான். இந்த பேனரை ஆர்.கே.நகர் தொகுதியிலும் வைத்துள்ளனர் அதிமுகவினர்.
பணமழை பொழியுமா?
இடைத்தேர்தல் என்றாலே பணமழை பொழியும். இந்த தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்பதால் நம்பியார் இல்லாத எம்.ஜி.ஆர் படம் போலத்தான் இருக்கும். அதெல்லாம் சரிதான் கரன்சி மழை பொழியுமா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.