‘குல்லா’ போட்ட நவாப்பு செல்லாது உன் ஜவாப்பு... தேர்தல் அறிக்கைக்காக வாங்கி கட்டும் தினகரன்
அதிமுக அம்மா கட்சியின் ஆர்.கே. நகர் வேட்பாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையைப் பார்த்து வாக்காள பெருமக்கள் ‘குல்லா‘ போட்ட நவாப்பு செல்லாது உன் ஜவாப்பு என்ற பாடலைப் பாடி கிண்டலடித்து வருகின்றனராம்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக அம்மா கட்சியினர் நேற்று வெளியிட்டனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். எதிரணியான அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதிக்கான அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக் கொண்டார்.
வானவில்லை அப்படியே வளைச்சி..
இந்த தேர்தல் அறிக்கையில், ஆர்.கே.நகருக்கான பல்வேறு திட்டங்களை கூறியிருக்கிறார்கள் அம்மா கட்சியினர். அதில், குறிப்பாக வீடற்ற 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களை வெளியேற்ற முயற்சி
57 ஆயிரம் வீடுகள் கட்டித் தர ஆர்.கே. நகர் தொகுதியில் எங்கே இருக்கிறது இடம் என்று கேள்வி எழுப்புக்கின்றனர் வாக்காள பெருமக்கள். மேலும் வீடு கட்டித் தருகிறோம் என்று சென்னையில் வாழும் மக்களை சென்னைக்கு வெளியே தூக்கி கிடாசும் வேலையைத்தான் தினகரன் செய்வார் என்று தொகுதி மக்கள் புலம்புகின்றனர்.
குப்பை கிடங்கு நவீனப்படுத்தி..
அனைத்து வசதிகளுடன் கூடிய பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், 10 நடமாடும் மருத்துவமனைகள் உருவாக்கப்படும் என்றும் அதிமுக அம்மா கட்சி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் மற்றும் கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு மாசு இல்லாமல் நவீன மயமாக்கப்படும் என்றும் உறுதி வழங்கப்பட்டுள்ளது.
அகற்ற வழி என்ன?
கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை அங்கிருந்து மாற்ற வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அதனை மாற்றுவதற்கான முயற்சிகள் குறித்து தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை. பலவிதமான தொற்று நோயாலும், சுவாசக் கோளாறாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு குப்பைக் கிடங்கை மாற்ற வழி சொல்லாமல் நவீனப்படுத்தி அங்கேயே வைத்துக் கொள்வதில் என்ன லாபம் இருக்கிறது என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேம்பாலம் கட்டி..
டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையில் புதிய மீன் அங்காடி அமைக்கப்படும் என்றும் எண்ணூர் -மணலி சாலையில் ரூ.117 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அரசு மற்றும் வங்கிப் பணியாளர் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும், வாரந்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குல்லா போட்ட நவாப்பு
டிடிவி தினகரன் என்ன சொன்னாலும் ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் நம்பத் தயாராக இல்லை என்கிறார்கள். நல்லதோ கெட்டதோ அதிமுகவுக்குத்தான் ஓட்டுப் போடுவோம் என்று சொல்லும் பெரும்பாலான ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள் கூட, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் வாக்களிப்பதில்லை என்று முடிவுசெய்துள்ளனராம்.