"சித்தி"க்கு எதிராக களமிறங்கும் "பூ"... திமுகவுக்கு மணக்குமா ‘செந்தூர்’?
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அவரது மனைவி ராதிகா, அவருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வருகிறார்.
சித்தி, அண்ணாமலை, வாணி ராணி என சன் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகை ராதிகா. இதனால், அவர் பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறதாம்.
இதனால், ராதிகாவிற்கு போட்டியாக திருச்செந்தூரில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த திமுகவும், காங்கிரஸும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம் கோவில் கட்டியது முதல், இட்லிக்கு பேர் வைத்தது வரை என குஷ்பு மீது தமிழக மக்களுக்கு இருக்கும் பாசம் தான். எனவே, குஷ்புவும் பிரச்சாரத்திற்கு அங்கு செல்லலாம் என்ற சூழல் நிலவுகிறது.
திருச்செந்தூரில் திமுக வேட்பாளராக அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.