இனி ரயில் டிக்கெட்களில் தமிழும் இருக்குமாம்.. ரயில்வே வாரியம்!
இனி ரயில் டிக்கெட்டுகளில் தமிழும் இடம் பெறும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை: இனி ரயில் டிக்கெட்டுகளில் தமிழும் இடம் பெறும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளின் நலச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் ரயில்வே கழக அலுவலகத்தில் இன்று அகில இந்திய ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே வாரிய அதிகாரிகள் மற்றும் இக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது தமிழக ரயில்வே பயணிகள் நலச்சங்கத்தினர் டிக்கெட்டுகளில் தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என்ற தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினர். இதனை தொடக்கத்தில் மறுத்த அதிகாரிகள் பின்னர் ஒப்புக்கொண்டனர்.
அதிகாரிகள் குழு ரயில்வே டிக்கெட்டில் தமிழ்மொழியை இடம்பெறச்செய்யும் வகையில் அதன் சாஃப்ட்வேர் தொழில்நுட்பத்தை மாற்றி வடிவமைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மேலும் மாநில வாரியாக அந்தந்த மாநில மொழிகள் ரயில் டிக்கெட்டுகளில் இடம்பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் இந்த முடிவை அமல்படுத்த 6 மாதம் ஆகும் எனத்தெரிகிறது. இனி டெல்லியில் ஓடும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கிலம் இடம்பெறும் அதேபோல் சென்னையை மையமாகக் கொண்டு ஓடும் ரயில்களில் இந்தி ஆங்கிலம் இவற்றுடன் தமிழ் மொழியும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.