செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதையில் தலைமை பொறியாளர் ஆய்வு
செங்கோட்டை: செங்கோட்டை - புனலூர் இடையே அமைக்கப்பட்டு வரும் அகல ரயில் பாதையை ரயில்வே தலைமைப் பொறியாளர் ஆய்வு செய்தார்.
இந்த மார்க்கத்தில், 52 கிலோ மீட்டர் மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில்பாதையாக மாற்ற 2010ஆம் ஆண்டு 375 கோடி ரூபாய் திட்ட மதீப்பிடு போடப்பட்டு 2010 அக்டோபர் 20ஆம் தேதி இப்பாதையில் இயங்கிக் கொண்டிருந்த மீட்டர் கேஜ் ரயில் நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கின.
முதல் கட்டமாக 85கோடி ரூபாயும்,இரண்டாவது கட்டமாக 35 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் போதிய நிதி இல்லாமல் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கேரள மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் வசந்திமுருகேசன், ராஜ்ய சபா உறுப்பினர் முத்துகருப்பன் உள்ளிட்டவர்கள் மக்களவையில் கேள்விகளை எழுப்பியும், ரயில்வே அதிகாரிகளை சந்தித்து பேசியும் இப்பணிகளை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இப்பாதையில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா ஆய்வுகளை மேற் கொண்டார். அதன்பின் கட்டுமான பொறியாளர் வேங்கடசாமி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்னர் வெங்கடசாமி கூறுகையில், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் இப்பணிகள் விரைந்து முடிக்கப்படும். வரும் ரயில்வே பட் ஜெட்டில் 200 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்ய கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் 85 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தென்னக ரயில்வேயின் கட்டுமானப் பிரிவு தலைமை பொறியாளர் வெங்கடசாமி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் செங்கோட்டை-புனலூர் பாதையில் ஆய்வுக்களை மேற்கொண்டனர்.
செங்கோட்டை முதல் பகவதிபுரம் வரை மோட்டார் ட்ராலியில் சோதனை மேற்கொண்ட அவர் பின்னர் கார் மூலம் பல பகுதிகளில் சோதனை மேற்கொண்டார். பின்னர் வெங்கடசாமி நிருபர்களிடம் கூறும் போது, 85 கோடி ரூபாய் நிதி போதாது. இன்னும் 65 கோடி ரூபாய் இத்திட்டத்திற்கு தேவை என்றார்.