ரயில்வே வளர்ச்சிக்கு தனியாக கூட்டு நிறுவனம் அமைக்க கோரி முதல்வருக்கு பயணிகள் சங்கம் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் ரயில்வேத்துறை வளர்ச்சிக்கு மாநில அரசும், மத்திய ரயில்வே துறையும் இணைந்து தனியாக கூட்டு நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:
தமிழ்நாடு ரயில்வே துறையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 3885 கி.மீ தூரம் ரயில் இருப்புபாதை வழி தடம் உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள பாதைகளில் சுமார் 70 சதவிகிதம் ஒரு வழி இருப்பு பாதையாகவே உள்ளது. இதே போல் தமிழகத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து சுமார் 3000 கி.மீ அளவுக்கு புதிய இருப்புபாதை அமைப்பதற்கு சர்வே செய்யப்பட்டு செயல்படுத்தபடாமல் உள்ளது.
தென் இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்கள் ரயில்வே துறை வளர்ச்சியில் படுவேகமாக முன்னேறி வருகிறது. கேரளா, ஆந்திரா மாநிலங்களில், ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற அம்மாநில அரசுகளுடன் சேர்ந்து ரயில்வே சமீபத்தில் கூட்டு நிறுவனங்களை துவக்கியது. ஒடிசா மஹாராஷ்டிரா மாநிலங்களும் கூட்டு நிறுவனங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.
தனியாக கூட்டு நிறுவனம் அமைத்தல்:
தமிழத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிக அளவு ரயில்வே திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீட்டர் கேஜ் பாதைகளை அகல பாதைகளை மாற்றுதல், ஒருவழிபாதையாக உள்ள பாதைகளை இருவழிபாதையாக மாற்றம் செய்தல், புதிய ரயில் பாதைகளை அமைத்தல், ரயில் பாதைகளை மின்மயமாக மாற்றுதல், புதிய முனைய வசதிகளை ஏற்படுத்துதல், புதிய ரயில்வே தொழிற்சாலைகளை அமைத்தல் ஆகிய முக்கிய திட்டங்கள் போதிய நிதி இல்லாத காரணத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இது போன்ற ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுகளுடன் இணைந்து ஐம்பது சதவிகித நிதியையும் தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து இலவசமா ரயில்வே துறைக்கு கொடுத்தால் இந்த திட்டங்கள் விரைவாக நிடைபெறும். மற்ற மாநிலங்கள் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற கூட்டு நிறுவகங்களை துவங்கியது போல தமிழகமும் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரயில்வேத் துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனத்தை உடனடியாக துவங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு 100 சதவிகிதம் முன்னுரிமை:
தமிழகம் ரயில்வேத் துறையுடன் இணைந்து கூட்டு நிறுவனம் துவங்கி பணிகளை செய்யும் போது அந்த பணிகளால் உருவாக்கப்படும் ரயில்வே வேலை வாய்ப்பில் 100 சதவிகிதம் தமிழர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். ரயில்வே திட்டங்களுக்கு தமிழக அரசு ஐம்பது சதவிகித நிதியை கொடுப்பதால் இந்த கூட்டு நிறுவனம் துவங்கும் போது அதில் தமிழக அரசு ரயில்வே துறையுடன் போடப்படும் ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு அதாவது தமிழ் மொழியை ஒரு மொழிபாடமாக படித்தவர்கள் மட்டுமே வேலை வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த வேலை வாய்ப்புகளுக்கு என போட்டி தேர்வுகள் நடத்தும் போது தமிழ் மொழியில் கேள்விதாள் இருக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் ஓர் சரத்து சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
தமிழக அமைச்சரவையில் ரயில்வே துறைக்கு தனி அமைச்சர்:
தமிழகம் ரயி;ல்வே துறையில் வளர்ச்சி பெறுவதற்கும், தமிழக பயணிகள் பயன்படும் விதமாக புதிய ரயில்கள் இயக்குதல், தமிழக்தில் உள்ள ரயில்பாதையை இருவழிபாதையை அதிகப்படுத்துவதற்கும், புதிய ரயில் இருப்புபாதைகள் அமைக்கவும், தற்போது மிட்டர் கேஜ் ரயில்பாதைகளை அகல ரயில்பாதைகளாக மாற்றும் பணியை துரிதப்படுத்துதல் என பல ரயில்வே திட்டங்கள் நடைமுறைபடுத்தட வேண்டியுள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவையில் ரயில்வே வளர்ச்சி துறைக்கு என தனி அமைச்சர் நியமிக்க வேண்டும்.
1050 கி.மீ தூரம் இருப்புபாதை கொண்ட கேரளாவில் தற்போது இது போன்ற ஒரு அமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். கேரளா அமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் ரயில் பட்ஜெட்டுக்கு முன்பு அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களின் கோரிக்கைகளை தொகுத்து மிக பெரிய கோரிக்கை பட்டியல் தயார் செய்து மத்திய ரயில்வே அமைச்சரை நேரடியாக சந்தித்து அவர்கள் மாநில கோரிக்கையை சாதித்து கொள்கின்றனர்.
இதை போல் தமிழகத்திலிருந்து ஒர் மாநில ரயில்வே அமைச்சர் இருந்தால் தமிழகம் ரயில்வே வளர்ச்சியில் முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை.தமிழக முதல்வர் இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலித்து தமிழக ரயில்வே வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.