எந்தப் பட்டாசா இருந்தாலும்... ரயில், பஸ்ஸுக்கு வெளியிலதான் இருக்கனும்.. உள்ளே வரப்படாது!
சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட பஸ், ரயில்களில் பட்டாசுகள் எடுத்துச் செல்லக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரயிலில் பட்டாசு கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர் ரயில்வே போலீசார். சென்னையில் தீவுத்திடலில் சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
நாடெங்கும் வரும் 29ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகை திருநாளை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். இதையொட்டி பல நகரங்களில் தெருவோர பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நகரங்களில் தங்கி வேலை செய்து வரும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்பவர்கள் நகரங்களில் இருந்து பட்டாசுகளை வாங்கிக்கொண்டு பெரும்பாலான மக்கள் பேருந்துகள் மற்றும் ரயில்களில் எடுத்துச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட்டால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படும் என்பதால் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி பஸ், ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் கொண்டு செல்லவும் தடை உள்ளது.
பஸ் மற்றும் ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பொதுமக்கள் பட்டாசுகள் எடுத்துச் சென்றால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும், பேருந்துகளில் அதிகப்படியான பட்டாசுகளை ஏற்றிச்சென்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து துறை மற்றும் ரயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகள், வெடிபொருள்கள் ரயில்களில் கொண்டு செல்வதைத் தடுக்க கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு ரயில்வே கோட்டத்திலும் ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பட்டாசு கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர்.