ரயிலில் ஊருக்கு போக இனி 120 நாளுக்கு முன் ரிசர்வேசன் – பெண்களுக்கு படுக்கை வசதி அதிகரிப்பு
சென்னை: ரயில் பயணம் செய்பவர்கள் இனி நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று ரயில்வே துறை கூறியுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
ரயில் முன் பதிவை 60 நாட்கள் என்பதிலிருந்து 120 நாட்கள் என்று அதிகரித்திருப்பதன் மூலம் இடைத்தரகர்களின் மோசடியைக் குறைக்க முடியும் என்று அரசு கருதுகிறது.
எனவே பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் ரயில் பயணச்சீட்டு தொடர்பான மென்பொருளில் சில மாற்றங்கள் கொண்டு வரும் பணிகள் நிறைவடையும் என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நல்லதா கெட்டதா?
இடைத்தரகர்களின் மோசடியைத் தவிர்ப்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று அரசு கூறினாலும், இன்னொரு பக்கம், 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யும்போது, அவற்றில் நிறைய பயணச்சீட்டுகள் ரத்து செய்யப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு ரத்து செய்யப்படும்போது, அதன் மூலம் ரயில்வேக்கு அதிகளவு லாபம் கிடைக்கும் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இதனால் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்பதால், அது கைவிடப்பட்டது.
எனினும் வெளிநாட்டுப் பயணிகள் 360 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுக்கை வசதி அதிகரிப்பு
ரயில்களில் தனியாக பயணம் செய்யும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மூத்தக் குடிமக்களுக்கு ரயில்களில் கீழ்ப் படுக்கை ஒதுக்கும் வசதி இரண்டில் இருந்து நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'மூத்தக் குடிமக்கள், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் ரயில்களில் தனியாக பயணம் செய்தால் கணினி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அவர்களுக்கு கீழ்ப் படுக்கை (லோயர் பெர்த்) தானாகவே ஒதுக்கப்படும் வசதி உள்ளது.
இதன்படி, ஒரு பெட்டிக்கு இரண்டு படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இனிமேல், இப்படுக்கையின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள்
மேலும், ரயில்களில் மாற்றுத் திறனாளிகள், மூத்தக் குடிமக்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு நடு (மிடில்) அல்லது மேல் (அப்பர் பெர்த்) படுக்கை ஒதுக்கப்பட்டால், டிக்கெட் பரிசோதகரே முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அவர்களுக்கு கீழ்ப் படுக்கையை ஒதுக்கித் தர அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.