100% வாக்குப்பதிவு... தேர்தல் ஆணையத்தின் கனவில் தண்ணீரை ஊற்றிய வானம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை நடத்திக்காட்ட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தில் லட்சியம் மழையால் சாத்தியமில்லாமல் போகும் நிலைமை காணப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல்கொண்டு மற்ற கட்சிகள் பிரச்சாரத்திற்கு ஆயத்தமானது போல, தேர்தல் ஆணையமும் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை நோக்கி பயணப்படத் தொடங்கியது.
இதற்கென பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டது தேர்தல் ஆணையம். ஆவின் பால் பாக்கெட் முதல் சிலிண்டர்கள் வரை அனைத்திலும் தேர்தல் தேதி அச்சிடப்பட்டது. மார்க்கெட்டுகளிலும் ஆங்காங்கே தேர்தல் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
மீம்ஸ்கள்...
சமூகவலைதளங்களிலும் தேர்தலை வலியுறுத்தி கலக்கலாக பல்வேறு மீம்ஸ்கள் வெளியிடப்பட்டது. இதேபோல், பிரபல நடிகர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியிடப்பட்டன.
விழிப்புணர்வு பிரச்சாரம்...
எப்படியும் இம்முறை சட்டசபைத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை நடத்திக் காட்டுவது என்ற இலக்கோடு உழைத்து வந்தது தேர்தல் ஆணையம். கட்சிகள் பிரச்சாரத்தை நிறுத்திய பிறகு, தேர்தல் ஆணையம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பிரச்சாரம் மேற்கொண்டது.
டிஜிட்டல் ஆட்டோகிராப்...
இது தவிர வாக்குப்பதிவு நாளன்று ஓட்டுப்போட்டதை டுவிட்டரில் பதிவு செய்தால் அவர்களின் கணக்கிற்கு தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகளின் கையெழுத்துடன் கூடிய புகைப்படங்கள் (டிஜிட்டல் போஸ்டர்) வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று வாக்களித்தவர்களுக்கு பிரபலங்களின் டிஜிட்டல் ஆட்டோகிராப்பும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வாக்கு சதவீதம் அதிகரிக்கும்...
இதனால் இம்முறை கடந்த தேர்தல்களைக் காட்டிலும் இம்முறை அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தான் அதிகபட்சமாக 78.01 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 2006-ல் 70.82 சதவீதமும், 2001-ல் 59.07 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. எனவே, இம்முறை புதிய சாதனை படைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
சந்தேகம்...
காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களிக்கச் சென்றனர். இதனால் நிச்சயம் இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என நம்பப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இலக்கான நூறு சதவீத வாக்குப்பதிவு நிஜமாகவில்லை.
திருவாரூரில் மழை...
காரணம் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் காலை முதல் மழை பெய்து வருவதால் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே உள்ளது.
கனமழை...
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் காவிரி டெல்டா, உட்புற மாவட்டங்களில் கன மழை பெய்வதால் அங்கு வாக்குப் பதிவு பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
சந்தேகம்...
இதனால் வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தன. ஆனால் அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதனால் இம்முறை தேர்தலில் 73.76 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.