வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு நிம்மதி.. சென்னையில் திடீர் மழை.. என்ன ஒரு காத்தோட்டம்!
சென்னையின் பல பகுதிகளில் மழையுடன் குளிர் காற்றும் வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. குளிர் காற்றும் வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காற்று மண்டல கீழடுக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று கூறினார். மேலும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் சொன்னது போன்றே, சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் முக்கிய பகுதியான வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், தியாகராயர் நகர் உள்ளிட்ட இடங்களில் மாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும், ராயப்பேட்டை, ராயபுரம், சிந்தாதிரிபேட்டை, தண்டையார்பேட்டை, அண்ணா சாலை, பாரிமுனை, நுங்கம்பாக்கம், மந்தவெளி, பட்டினப்பாக்கம், எம்ஆர்சி நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேப் போன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், சோழவரம், செங்குன்றம், புழல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்கிறது.
அடித்த வெயிலுக்கு இதமாக பெய்யும் இந்த மழையால் மக்கள் புழுக்கம் தீர்ந்து மக்கள் குஷியாகியுள்ளனர்.