அடுத்த 3 நாளுக்கு வெயில் அதிகரிக்கும்.. தமிழகம் புதுச்சேரியில் மழை பெய்யும்- வானிலை மையம்
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 1 முதல் 3 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, குளிர்ந்த காற்றும் வீசியது.
இது தொடர்பாக சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெப்ப சலனம் காரணமாக சாத்தூரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும், வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் இடியுடன் கூடிய கோடை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை மாலை, இரவு நேரங்களில் கோடை மழை பெய்யலாம்.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்சமாக 1ல் இருந்து 2 டிகிரி அளவுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. கடல்காற்று தாமதமாக வீசுவதாலும், மேற்கிலிருந்து தரைக்காற்று வலுவாக வீசுவதாலும் வெப்பம் அதிகரிக்கும் என அவர் கூறினார்.