நின்று போன திருமணங்கள்.. உடலை எரிக்க முடியாமல் அலைந்த மக்கள்.. மழை படுத்திய பாடு!
சென்னை: மழை என்றதும் மழையால் ஏற்பட்ட வெள்ளம், அதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, வீடுகளில் சிக்கியோர் மீட்கப்பட்ட கதை மற்றும் சாலைகள் மோசமான முறையில் பாதிக்கப்பட்டது இதுதான் நினைவில் வரும், அதிகமும் இதுதான் பேசப்பட்டது. ஆனால் பின்னணியில் மிகப் பெரிய பொருளாதார இழப்பை சென்னை சந்தித்துள்ளது.
வர்த்தகர்கள் மிகப் பெரிய அளவில் இழப்புகளைச் சந்தித்துள்ளனர். இவையெல்லாம் ஏதாவது ஒரு வகையில் விலை உயர்வு ரூபத்தில் மக்களின் தலையில் ஏறி விடும் என்றாலும் கூட திடீர் இழப்பு அவர்களை ஆட்டம் காணச் செய்து விட்டதாம்.
இதேபோல மக்களும் கூட பல்வேறு வகையான நஷ்டத்தையும், பாதிப்புகளையும் சந்தித்து அல்லாடிப் போய் விட்டனர். அதுகுறித்த ஒரு தொகுப்பு இது...
மழையில் கரைந்த மரணக் கண்ணீர்
கன மழை காரணமாகவும், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருந்ததாலும், இறந்து போனவர்களின் உடல்களை எரிக்கவும் முடியாமல், மயானத்திற்குக் கொண்டு செல்லவும் முடியாமல் பலர் தடுமாறியுள்ளனர்.
கல்லறைகளில் தண்ணீர்
உடல்களை அடக்கம் செய்யப் போனால் அங்கு கல்லறைகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் வெள்ளக்காடாக இருந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிம்மதியாக உடலை அடக்கம் கூட செய்ய முடியாத நிலையை மக்கள் சந்தித்தனர்.
நின்று போன திருமணங்கள்
இதேபோல மழை நேரத்தில் நடத்தப்படவிருந்த பல திருமணங்கள் வெள்ளம் வந்ததால் தடைபட்டுப் போயுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மாப்பிள்ளை, பெண்ணை மண்டபத்திற்குக் கூட அழைத்து வர முடியாத நிலை பல ஊர்களில் ஏற்பட்டதாம். மேலும் அதையும் தாண்டி நடந்த திருமணங்களில் விருந்தினர் கூட்டம் அடியோடு இல்லாததால் சாப்பாடு பெருமளவில் வீணாகியுள்ளது.
நிறுத்தியவர்கள் அதிர்ச்சியில்
மழை காரணமாக திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு செலவழித்து விட்டு கடைசி நேரத்தில் நிறுத்தியதால் பலருக்கு பல லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் திருமணத்தை நடத்த மீண்டும் செலவு செய்ய வேண்டுமே என்ற சோகத்தில் அவர்கள் உள்ளனராம்.
பள்ளிகள் மூடல்
தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் அடுத்தடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 2 வாரத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டதால் பாடம் நடத்துவது தடை பட்டுப் போய் விட்டது. பல மாணவர்கள் வெள்ள நீரில் தங்களது புத்தகம், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவற்றை இழந்து விட்டனர்.
சேதமடைந்த வாகனங்கள்
மழை நீரில் மூழ்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலர் வாகனங்களை இழந்துள்ளனர், சேதத்தை சந்தித்துள்ளனர். அட, பல இடங்களில் வாகனங்களை சரி பார்க்கும் மெக்கானிக் ஷாப்புகளே நீரில் மூழ்கிப் போன கதையும் நடந்துள்ளது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் செலவீனம் அவர்களது மாதாந்திர பட்ஜெட்டை பதம் பார்த்துள்ளது.
உடல் பாதிப்பு
இதுபோக சுகாதார பாதிப்புகளையும் மக்கள் சந்தித்துள்ளனர். சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட திடீர் பாதிப்புகளும் மக்களை முடக்கியுள்ளன. பலர் இன்னும் கூட உடல் நல பாதிப்பிலிருந்து மீளாமல் உள்ளனர்.