விடிய விடிய பெய்த கனமழை.. சென்னை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் அடித்து ஊற்றியது
சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இரவில் விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்று காலை தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. மீண்டும் இரவு முழுவதும் கனமழையாக கொட்டி வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நாடா புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றது. இது நேற்று அதிகாலை 4 முதல் 5 மணிக்குள், நாகப்பட்டினம்- காரைக்கால் இடையே கரையைக் கடந்தது. இது வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தமிழகத்தின் உள் பகுதியில் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் உள்பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் நேற்று மாலை மழைபெய்தது. சென்னை கோயம்பேடு, கிண்டி, சைதாப்பேட்டை, பல்லாவரம், அடையாறு, ஈக்காட்டுத்தாங்கல், ஆழவார்பேட்டை, குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்பட பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சில இடங்களில் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது
கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு நிறுத்தி நிதானமாக மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஓசூர், சேலம், கரூர், நாமக்கல் பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நகர் பகுதிகளில் இரவு முழுவதும் விடாமல் கனமழை பெய்து வருகிறது. பேரையூர், உசிலம்பட்டி பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.