3 மணிநேரத்தில் 7 செ.மீ மழை.. டிசம்பர் பீதியில் சென்னைவாசிகள்.. இன்றும் மழை தொடரும் #chennairains
சென்னை: சென்னையில் 3 மணி நேரத்திற்குள் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.
வெப்ப சலனம் காரணமாக நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டோ, கொட்டென கொட்டத் தொடங்கியது. தாம்பரம், ராயப்பேட்டை , திருவல்லிக்கேணி, வடபழனி, சாலிகிராமம், பட்டினப்பாக்கம், கிண்டி , அடையாறு , மீனம்பாக்கம், அண்ணாசாலை, சேத்துப்பட்டு, சோழிங்கநல்லுார், ஆயிரம்விளக்கு, ஈக்காட்டுதாங்கல், பூந்தமல்லி, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
சென்னையில் 3 மணிநேரத்தில் 7 செ.மீ மழை பதிவானது. இன்றும் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்துள்ளது. நேற்றிரவு பெய்த கன மழையால் பல இடங்களில் கால் முட்டி உயரத்துக்கு தண்ணீர் ஓடியது. வாகனங்களில் எதிரே வருவோர் தெரியாத அளவுக்கு அடர்த்தியாக மழை பெய்தது.
கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த பெருமழையை சென்னை மக்களுக்கு நினைவூட்டியது இந்த கன மழை. இதனால் மக்கள் பீதியோடே இரவை கழித்தனர். அரசு மற்றும் மாநகராட்சி இன்னமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ள நிலையில், பெருமழையை சென்னை தாங்குமா என்பது கேள்விக்குறியே.