திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளை குளிர்வித்த கோடை மழை
மதுரை: கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலின் கோரதாண்டவம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. ஆனால், கத்திரி வெயிலுக்கு முன்பே மார்ச், ஏப்ரல் மாதம் முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரங்களில் அனல் காற்றும், இரவு நேரங்களில் புழுக்கத்தின் காரணமாகவும் பொதுமக்கள் பாதிப்பு உள்ளாகினர்.
தொடர்ந்து வெப்பம் நீடித்து வருகிறது. வெப்பச்சலனத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பகலில் வெயில் வெளுத்து வாங்கியது. அதேநேரம் மாலை நேரத்தில் மழை பெய்ந்து குளிர்வித்தது. அதேபோல் திண்டுக்கல், சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 50 மி.மீ., சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் 20 மி.மீ., ஈரோட்டில் 10 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் பெய்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.