சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை!
சென்னை: சென்னையின் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கன மழை பெய்து வரும் நிலையில் அது மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
சென்னையில் கடந்த 12ம் தேதி இரவு கன மழை கொட்டித் தீர்த்தது. பிறகு சில பகுதிகளில் ஆங்காங்கு மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மாலை, தாம்பரம், குரோம்பேட்டை, வட பழனி பகுதிகளில் கன மழை பெய்தது.
மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை இலாகா அறிவித்திருந்த நிலையில் மழை தொடருகிறது. நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இந்நிலையில் பெங்களூரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது.
கடந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு இந்துஸ்தான் ஏரோநாடிகல் லிமிடட் மையத்தில் 14.4 செ.மீ மழையும், சிட்டி ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் 12.9 செ.மீ அளவு மழையும் பெய்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை பெய்துள்ளது என்று கூறப்படுகிறது.