சென்னையில் ஜிலுஜிலுன்னு நீடிக்கும் மழை.. ஊரே "கூல்" ஆனது.. போக்குவரத்து "ஜாம்" ஆனது!
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வளசரவாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், முகப்பேர் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.
மேலும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலையின் இருபுறமும் மழைநீர் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் இரு சக்கர வாகனம் , நான்கு சக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன. இதேபோல் தமிழகத்தின் சேலம், திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் 7 மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்ததால் அங்குள்ள ஜம்பு ஏரி நிரம்பியது. விழுப்புரத்தில் விடிய விடிய மழை பெய்ததால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சேலம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது.