தமிழகம் முழுவதும் கொட்டும் கன மழை… 2 பேர் பலி – நீரில் மூழ்கிய பயிர்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்த மழைக்கு நேற்று ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மழைக்கு நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 8 நாட்கள் உள்ள நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இரவில் தினமும் மழை பெய்து வருகிறது.அத்துடன் கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதை தொடர்ந்து தமிழகத்திலும் அவ்வப்போது மழை பெய்கிறது.
தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, கடலூர், ஈரோடு, திருவண்ணாமலை, கோவை, சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. குமரி மாவட்டத்திலும் இந்த மழை அதிகமாக பெய்கிறது.
கடந்த 10 நாட்களாக தினமும் மழை பெய்வதால் வெப்பம் தணிந்துள்ளது.
சென்னையில் மழை
சென்னையை பொறுத்த வரை கடந்த 1ம் தேதியில் இருந்து இதுவரை தினமும் இரவில் மழை பெய்து வருவதால் 8 செ.மீ. அளவுக்கு மழை கிடைத்து உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளான புழல், செம்பரபாக்கம் ஏரி பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்துள்ளதால் இந்த 2 ஏரிக்கு மழைநீர் ஓரளவு வந்த வண்ணம் உள்ளது.
ஏரிகளில் நீர் இருப்பு
புழல் ஏரிக்கு 18 மி.மீட்டர் மழைநீரும், செம்பரபாக்கம் ஏரிக்கு 46 மி.மீட்டர் மழைநீரும் வருவதால் ஏரியில் தண்ணீர் சிறிதளவு அதிகரித்து வருகிறது. தற்போது புழல் ஏரியில் 64 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கத்தில் 249 மில்லியன் கனஅடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரிக்கு மழை தண்ணீர் வராததால் நீர்மட்டம் உயரவில்லை. 82 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் உள்ளது. இதே போல் சோழவரம் ஏரிக்கும் மழைநீர் வரவில்லை. இந்த ஏரி கடந்த 4 மாதமாக தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது.
திருச்சியில் வெள்ளம்
திருச்சி மாவட்டத்தில், நேற்று இரவு, 11 மணி முதல், அதிகாலை, 3 மணி வரை, பலத்த மழை பெய்தது. இதனால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும், விளை நிலங்களிலும் மழை வெள்ள நீர் புகுந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, துறையூர் பகுதியில், காளிப்பட்டி என்ற இடத்தில் சாலை துண்டிக்கப்பட்டு, திருச்சி- துறையூர் வழித்தடத்திலான போக்குவரத்து தடைபட்டது. இதனால், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
பயிர்கள் பாதிப்பு
துறையூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள கால்நடை மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. செங்காட்டுப்பட்டி பகுதியில் விவசாய நிலங்களில், மழை வெள்ள நீர் புகுந்ததால், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர் நீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.மேலும், திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை, தாயனுார், முத்தரச நல்லுார் ஆகிய பகுதிகளில், கடந்த சில நாட்களாக, சம்பா நெல் நடவுப்பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த மழையால், வயல்களில் மழைநீர் தேங்கியது.
நீலகிரி, கோவையில் மழை
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே உள்ள மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
ஈரோடு மழை வெள்ளம்
ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழைக்கு நம்பியூர் பகுதியில் 30 வீடுகளையும், அந்தியூர் பகுதியில் 20 வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. அந்தியூர்- மைசூர் ரோட்டில் மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு, அறச்சலூர் மற்றும் பெருந்துறை பகுதியில் வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் அறச்சலூரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். விஜயமங்கலத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார்.
திருப்பூரில் பாதிப்பு
திருப்பூரில் பெய்த மழையால் ரயில் நிலையம் அருகே ரயில்வே சுரங்கப்பால பணிக்காக சாக்கடை கால்வாய் துண்டிக்கப்பட்டுள்ளதால், சிட்கோ பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களுக்குள் வெள்ள நீரும், கழிவு நீரும் புகுந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் மற்றும் எந்திரங்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
உடைந்த ஏரி
நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையால் திருச்செங்கோட்டில் உள்ள சூரியம்பாளையம் ஏரி உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தஞ்சையில் மூழ்கிய பயிர்கள்
தஞ்சை மாவட்டத்தில் பெய்த மழையால் நடவு செய்யப்பட்டு 10 நாட்களேயான நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சையில் மட்டும் 13 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்தது.
பாலம் இடிந்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழைக்கு மாவட்டத்தில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மழை நீடிக்கும்
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்துவருகிறது. வடகிழக்கு பருவமழை 3 நாட்களுக்குள் தொடங்குவதற்கான அறிகுறி இல்லை. தென் மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறியுள்ளார். வடமாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். நாளை (புதன்கிழமை) தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.
மழை அளவு
நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர மழை அளவு விபரம்: வேம்பாவூர், தஞ்சை தலா 14 செ.மீ., சத்திரப்பட்டி, சோழவந்தான் தலா 13 செ.மீ., துறையூர் 12 செ.மீ., மங்களாபுரம் 11 செ.மீ., ஏற்காடு, விராலிமலை தலா 10 செ.மீ., கோபிச்செட்டிப்பாளையம், வாழப்பாடி, மேல்அணைக்கட்டு, திருப்பூர் தலா 9 செ.மீ., செந்துறை 8 செ.மீ., ஒசூர், சேலம், பேரையூர், பாலக்கோடு, தஞ்சைமாவட்டம் பாபநாசம், திருக்கோவிலூர் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.