பிரபாகரனுக்கு பணம் கொடுத்து தேர்தலில் ஜெயித்த மகிந்த ராஜபக்சே..: ரணில் சொல்கிறார்
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு பணம் கொடுத்துதான் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மகிந்த ராஜபக்சே வெற்றி பெற்றதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிக்கே 'தந்தி' தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
2005ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் 2009-ல் நடந்த நிகழ்வுகளை என்னால் தடுத்திருக்க முடியும்.
மகிந்த ராஜபக்சேவை அதிபராக்கியது யார்? தென்னிலங்கை மக்கள் அல்ல. 3 முதல் 4 லட்சம் தமிழர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது குறித்து ராஜபக்சேவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.
ராஜபக்சே, விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தார். பணத்தை எடுத்துச் சென்று கொடுத்த அமிர்காந்தன் இன்றும் மத்திய கிழக்கு ஆசியாவில் எங்கோ இருக்கிறார்... இது தெரிந்த விஷயம்தான்..
இதை ராஜபக்சே கூட மறுத்தது கிடையாது. பிரபாகரன் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வோம்
விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களைக் கடத்தியவர்களைத்தான் இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. எங்களது கடற்பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் வரவேண்டும்?
எங்கள் கடற்பரப்பை ஆக்கிரமித்தால் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களை சுட்டுக் கொல்ல எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது.
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.