சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர் கைது- ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவளித்ததாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஆரூண் என்பவரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை: ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்ததாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஆரூண் என்பவரை அதிகாலையில் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக மத்திய அரசுக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. அத்தகைய தகவல்களின் பேரில் உளவு அமைப்பினரும் பல்வேறு மாநில காவல்துறையினரும் இணைந்து செயல்பட்டு, பலரைக் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் வைத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை ரகசியமாக கண்காணித்த உளவு அமைப்பின் அதிகாரிகள், பின்னர் தகுந்த ஆதாரங்களுடன் அனைவரையும் கைது செய்தனர். கேரளாவிலும் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்த பலர் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானில் கைது
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜமீல் முகமது என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவருடன் தமிழகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தொடர்பில் இருப்பதாக தெரியவந்தது.
சென்னையில் ஐஎஸ் ஆதரவாளர்கள்
இதன் அடிப்படையில் விசாரணை நடந்தபோது சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த இக்பால் என்ற வாலிபர் ஒருவர் ஜமீல் முகமதுடன் தொடர்பு வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. இக்பாலை ராஜஸ்தான் போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில், சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் தங்கம் கடத்தல் வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இக்பாலும் ஒருவர்.
ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார்
இக்பால் கைது செய்யப்பட்ட தகவல் ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னை வந்த ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சென்னைக்கு வந்து இக்பாலை கைது செய்து அழைத்துச் சென்றனர்
மண்ணடி ஆருண்
இக்பால் பணம் வசூலித்து ஐ.எஸ். இயக்கத்துக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. அவர் சென்னையைச் சேர்ந்த 4 பேரிடம் பணம் வசூல் செய்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து இக்பாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மண்ணடி பர்மாபஜாரில் ஆரூண் என்பவரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.