நெஸ்ட்லே, ரிலையன்ஸ் பால் பவுடரில் கலப்படம் - ஆதாரத்துடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்
நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ் பால் பவுடரில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அம்பலப்படுத்தியுள்ளார்.
சென்னை: தனியார் பால் நிறுவனங்கள் கெட்டுப்போன பாலில் காஸ்டிக் சோடா சேர்த்து பவுடராக்கி விற்பனை செய்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ் பால் பவுடரில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஆதாரத்துடன் கூறியுள்ளார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஆவின் பால், தயிரில் எந்தவித கலப்படமும் இல்லை என்று கூறினார்.
தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன எனவும், தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது எனவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று பால் முகவர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழக பால்வளத்துறை சார்பில் புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு மே 31ம் தேதி சோதனைக்காக அனுப்பப்பட்ட பால் மாதிரிகளில் உயிருக்கு தீங்கிழைக்கும் எந்த ஒரு ரசாயன பொருட்களும் கலப்படம் செய்யப்படவில்லை எனவும், அதன் முடிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.
எந்த நிறுவனத்தின் பாலில் கலப்படம் இருக்கிறது என்று கூறாமல் பொத்தம் பொதுவாக தனியார் பாலில் கலப்படம் என்று கூறியதற்கு பால் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பொறுப்பற்ற முறையில் பேசிய ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதுநாள் வரை பால் பற்றி கூறி வந்த கே.டி ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் பவுடரில் ரசாயனப்பவுடர் கலக்கப்படுகிறது என்று கூறினார்.
கெட்டுப்போன பாலில் காஸ்டிக் சோடா சேர்த்து பவுடராக்கி விற்பனை செய்வதாக கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நெஸ்ட்லே டுடே, ரிலையன்ஸ் பால் பவுடரில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரத்துடன் கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறி நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதை கூறியதாக தெரிவித்தார். என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு அனைவரும் பேசி கலந்து முடிவு செய்வோம். இப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதை ஆதாரப்பூர்வமாக அறிவித்தேன் என்றார் அமைச்சர்.