ரஜினிக்கு மக்கள் முன் நடிக்கத் தெரியாது.. ரசிகர்கள்
நடிகர் ரஜினி காந்துக்கு திரையில் மட்டுமே நடிக்கத் தெரியும், ஆனால் மக்கள் முன் நடிக்க தெரியாதவர் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.
சென்னை: ரஜினிகாந்த்துக்குத் திரையில் மட்டுமே நடிக்கத் தெரியும். சில தலைவர்களை போல் மக்கள் முன்பு நடிக்க தெரியாதவர் என்று ரசிகர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். எனினும் அவர் எதற்கும் பிடிகொடுக்காமல் இருந்து வருகிறார். தற்போது ரசிகர்களை கடந்த 5 தினங்களாக மாவட்டம் வாரியாக சந்தித்து வந்தார்.
தொடக்க நாள் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் அவர் கூறியபோது, இன்று நடிகன், நாளை நான் என்னவாக வேண்டும் என்று கடவுள் முடிவு செய்கிறாரோ அந்த பொறுப்பை ஏற்று மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்படுவேன் என்றார்.
தமிழக அரசியல் சிஸ்டம்
ரசிகர்கள் சந்திப்பின் இறுதி நாளான நேற்று அவர் பேசுகையில், தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை, அரசியல் சிஸ்டம் சரியில்லை, தமிழகத்தில் திறமையான அரசியல்வாதிகள் இருந்தும் பயனில்லை என்றும் போர் வரும்போது பார்த்து கொள்வோம் என்று தெரிவித்தார்.
அரசியல் தலைவர்கள் கருத்து
ரஜினியின் கருத்து குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், ரஜினி நல்ல நடிகர். ஆனால் தமிழகத்துக்கு தேவை நல்ல நடிகர் அல்ல, நல்ல நிர்வாக திறமைசாலி என்று கருத்துகள் எழுந்துள்ளன. இது ரசிகர்களிடையே ரியாக்ஷனை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் முன்பு நடிக்கத் தெரியாதவர்
இதுகுறித்து ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் நம்மிடம் தெரிவிக்கையில், ரஜினிகாந்துக்கு திரையில் மட்டுமே நடிக்கத் தெரியும். மற்ற அரசியல் தலைவர்கள் போல் மக்கள் முன்பு நடிக்கத் தெரியாதவர். மீனவர்கள், ஜல்லிக்கட்டு, நதி நீர் இணைப்பு, ஈழத் தமிழர் பிரச்சினை உள்ளிட்டவற்றில் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கவில்லை என்கின்றனர்.
மற்றவர்கள் போராடினரா?
தற்போது அரசியலில் லாபத்தை மட்டுமே குறியாக வைத்து கிட்டதட்ட 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஏமாற்றி வந்தவர்கள் தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்த்துள்ளனரா, இல்லை போராட்டங்களில்தான் கலந்து கொண்டுள்ளனரா. தற்போதும் இவர்கள் குரல் கொடுப்பது தங்கள் கட்சியை தக்க வைத்து கொண்டு மக்களிடம் முதலைக் கண்ணீர் வடிப்பதற்காகவே தவிர மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றல்ல.
இரோம் ஷர்மிளாவுக்கு எத்தனை ஓட்டுகள்?
ஆயுத சிறப்புப் படை தடைச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக போராடிய இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவுக்கு எத்தனை ஓட்டுகள் கிடைத்தன?, இடிந்தகரையில் கூடங்குளம் அணு நிலையம் திறக்கக் கூடாது என்று போராடிய உதயகுமார் கடந்த 2014-இல் நடைபெற்ற தேர்தலில் எத்தனை ஓட்டுகள் கிடைத்தன? என்னை பொருத்தவரையில் ரஜினி அரசியலில் குதித்தால் தாங்கள் காணாமல் போய்விடுவோம் என்ற பயத்தின் காரணமாக இதுபோன்ற குரல் கொடுத்து வருகின்றனர்.
இவர்கள் சொன்னால் மட்டும்...
இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டு கொண்டற்கிணங்க ரஜினி தனது பயணத்தை ரத்து செய்தார். அப்போது மட்டும் ரஜினி எங்களது நண்பர் அவர் இலங்கைக்கு செல்லக் கூடாது என்கின்றனர். தற்போது அரசியலில் அவர் குதிக்கலாம் என்ற கருத்து நிலவும் போது அவர் என்ன செய்தார் என்கின்றனர். ஈழத் தமிழர், கச்சத் தீவு, மீனவர்கள் காவிரி, பாலாறு, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எத்தனை பிரச்சினைகளில் இத்தனை காலம் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் தீர்த்து வைத்தனர் என்பதை பட்டியலிடுங்கள். ஓரிரு சீட்டுகளுக்காக ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைத்து கொள்ளும் அரசியல் கட்சிகள் ரஜினி குறித்து பேச தகுதி இல்லை.
பணம் சம்பாதிக்கவா
ரஜினி அரசியலுக்கு வருவது மக்களுக்கு நல்லது செய்யவே. பணம் சம்பாதிக்கும் நோக்கம் இல்லை. இதற்கு அவருக்கு அவசியம் இல்லை. அவர் கண்ணசைத்தால் போதும். 1980, 90-களை போல் ஆண்டுக்கு 4 அல்லது 5 படங்கள் நடித்தால் போதும். ஆனால் அவரது எண்ணம் மக்களுக்கு நன்மை செய்யவே என்றார்.