பெண் அடிமைத்தன டயலாக் பேசி வந்த ரஜினியை சம உரிமை பேச வைத்த மகள்! ரசிகைகள் 'மகிழ்ச்சி'
சென்னை: பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பதன் அவசியத்தை, இத்தனை வருடமாக பல படங்களில் பெண் அடிமைத்தனத்தை தூக்கி பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச ஆரம்பித்துள்ளது அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷால்தான் என்பது சுவாரசியமே.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ஐநா சபையின் தென்னிந்திய பெண்கள் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனை முன்னிட்டு ரஜினி ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
ரஜினி அதில் கூறியுள்ளதாவது: என்னுடைய மகளான ஐஸ்வர்யா எப்போதும் தன்னுடைய சொந்தக் காலில் நிற்கும் அளவுக்கு தன்னம்பிக்கையும் ஆற்றலும் பெற்றவர். அவர் ஐநா உடன் இணைந்து பெண்களுக்கான சம உரிமைக்காக பணியாற்றுவது எங்களுக்கு பெருமைக்குரிய மற்றும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். பெண்களுக்கான சம உரிமைக்காக அவர் செய்துள்ள பணிகளை நான் பாராட்டுகிறேன். அவர் செய்யும் இப்பணிகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன்.
ஒரு தந்தையாக உலக நாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்திய தூதுவராக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. அவர் பெருமைக்குரிய இப்பணியில் இருந்து பெண்களுக்கான சம உரிமை மற்றும் முன்னேற்றத்துக்காக பணியாற்றவிருப்பது எனக்கு மகிழ்ச்சியே.
சம உரிமை என்பது பெண்களுக்கான ஒரு பிரச்சனை மட்டும் அல்ல, அவர்களின் சம உரிமைக்காக நாம் அனைவரும் போராட வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும். பெண்களுக்கு வீடுகளிலும், அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும் சம உரிமை கிடைக்க வேண்டும். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
ரஜினி தனது செய்திக்குறிப்பில் எத்தனை இடங்களில் சம உரிமை என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்பதை நீங்களே எண்ணி பார்த்துக்கொள்ளலாம்.
ஆனால், ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் பெண்கள், ஆணைவிட ஒருபடி கீழேதான் இருக்க வேண்டும் என்ற கருத்துக்களைத்தான் சொல்லி வந்துள்ளார்.
Very happy Aishwarya is associated with #UNWomenIndia #UNWomen https://t.co/yCmTzoC8Rj
— Rajinikanth (@superstarrajini) August 30, 2016
மன்னன், மாப்பிள்ளை, படையப்பா உள்ளிட்ட பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். "பொண்ணுன்னா புடவை கட்டிக்கணும்", "அடக்கமா இருக்கணும்", "அதிகமா ஆசைப்படக் கூடாது" என்பதெல்லாம் ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்திலும் தவறாமல் சொல்லி வந்த விஷயங்கள்.
நம்பர் ஒன் தொழிலதிபராக இருக்கும் ஹீரோயினை, சமயலறைக்கு ஷிப்ட் செய்து சுபம் போடுவதுதான் மன்னன் படத்தின் படக்கருவே. படையப்பாவிலோ, ரம்யா கிருஷ்ணனை எதிர்க்கிறேன் என்ற பெயரில் பெண்களை விட்டு விளாசியிருக்கும் பல டயலாக்குகள். ஆனால் இப்போது ஐஸ்வர்யா தனுஷ் தனது தந்தையை சம உரிமை பேச வைத்துள்ளார்.
மகள்கள் பெரியவர்களானதும், பெண்கள் சுய மரியாதை மீது ஆண்களுக்கு நம்பிக்கை வந்துவிடும் என்பார்கள். ரஜினி விஷயத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான கபாலி திரைப்படத்தில் பெண்களுக்கு எதிரான ஒரு வசனம் கூட ரஜினி பேசவில்லை என்பது அவரது மாற்றத்தை காட்டுகிறது. மாறாக, அப்படத்தில் இடம்பெற்ற ரஜினி மகள் கேரக்டர், ஹீரோவுக்கு இணையாக எதிரிகளை பந்தாடும் என்பது கவனிக்கத்தக்கது.