சாராய ஆலை, ஐடி ரெய்டு, சர்ச்சைகள்.. இவரைப் போயா பொதுச் செயலாளராக்க ஆசைப்படுகிறார் ரஜினி?
சாராய ஆலை, ஐடி ரெய்டு என சர்ச்சைகளில் சிக்கிய ஜெகத்ரட்சகனை தமது கட்சியின் பொதுச்செயலராக்க ரஜினி விரும்புவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு முன்னரே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது சாராய ஆலை அதிபரும் ஐடி ரெய்டில் சிக்கியவருமான ஜெகத்ரட்சகனை தமது கட்சியின் பொதுச்செயலராக்க போகிறார் என்கிற செய்திகள் ரஜினி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஜினிகாந்த் எதை தொட்டாலும் சர்ச்சையாகவே இருந்து வருகிறது. சினிமாவில் இருந்த காலங்களிலும் சர்ச்சை... இப்போது அரசியல் ஆசையுடன் களமிறங்க நினைக்கும்போதும் சர்ச்சைதான்..
ரஜினிகாந்த் தமிழக அரசியலுக்கு வரக்கூடாது என சீமான் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தாம் 44 ஆண்டுகாலமாக தமிழகத்தில் இருப்பதால் பச்சை தமிழன் என ரஜினி கூறினார்.
பொதுச்செயலராக ஜெகத்?
இப்போது தனிக்கட்சி தொடங்குவதில் உறுதியாக இருந்து வருகிறார். தம்முடைய கட்சியின் பொதுச்செயலராக முன்னாள் மத்திய அமைச்சரான திமுகவின் ஜெகத்ரட்சகனை நியமிக்க விரும்புகிறார் ரஜினி என தகவல்கள் வெளியாகின.
மதுபான ஆலைகள்
இதுவும் இப்போது சர்ச்சையாகிவிட்டது. ஜெகத்ரட்சகன் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அத்துடன் எலைட் டிஸ்டில்லரீஸ், ஏ.எம்.புருவரீஸ் ஆகிய மதுபான ஆலைகளையும் வைத்திருக்கிறார். இதுகுறித்து பெரும் சர்ச்சைகள் ஏற்கனவே உள்ளன.
ஐடி ரெய்டு
கடந்த ஆண்டு வருமான வரி சோதனையிலும் சிக்கினார். அப்போது ரூ600 கோடிக்கு அதிகமாக சொத்து குவித்தார் எனவும் ஜெகத்ரட்சகன் வீட்டில் கணக்கில் வராத 40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
முரணாக இருக்கிறதே
ஊழலை ஒழிப்பேன், மதுபழக்கத்தை கைவிடுங்கள், குடிக்காதீங்க, குடும்பத்தைப் பாருங்க என முழங்கி வரும் ரஜினிகாந்த் இந்த இரண்டு விஷயங்களுக்கும் நேர் முரணான ஜெகத்ரட்சகனை தான் ஆரம்பிக்கப் போகும் புதுக் கட்சியின் பொதுச்செயலராக்குவது எப்படி சரியாகும்? என்பது ரஜினி ரசிகர்களின் கேள்வி. ஆரம்பமே இப்படி இருந்தால் இது சரிவராதே என்பதும் ரஜினி ரசிகர்களின் முனுமுனுப்பாகும்.