ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதிப்பார்களா? விஜயகாந்த் அடடே பதில்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் இருவருமே அரசியலில் குதிக்க மாட்டார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.
விஜயகாந்த் மேலும் கூறியுள்ளதாவது: ஒரே நேரத்தில் அரசியல், நடிப்பு என இரட்டைக் குதிரைகளில் பயணிப்பது கடினம் என ரஜினிகாந்தே என்னிடம் முன்பு கூறியுள்ளார்.
2 குதிரைகள்
ரஜினிகாந்த் எப்போதும் அரசியல் பற்றி பேச மட்டும் தான் செய்வார் . அதைதான் அவர் சரியாக கடைபிடிப்பார். அவரால் 2 குதிரைகளில் பயணம் செய்ய முடியாது என்பதை நான் உணர்ந்துள்ளேன். கடந்த காலங்களில் ரஜினி எதை செய்தாரோ, அதைத் தான் இப்போதும் செய்வார்.
பாராட்டிய ரஜினி
அதேநேரம், நான் தைரியமாக அரசியலில் குதித்த போது ரஜினி அதற்காக என்னை பாராட்டினார். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வருவதென்பது இனிமேல் நடக்காத காரியம் என்றுதான் நான் கருதுகிறேன்.
கமலும் குதிக்கமாட்டார்
கமல்ஹாசனும் அரசியலுக்கு வர மாட்டார் என்றுதான் தெரிகிறது. லஞ்ச ஊழலுக்கு எதிராக கமல் கருத்து தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்பது புரியவில்லை. தமிழக அரசில் ஊழல் மோசமான நிலையில் உள்ளது. தமிழகத்தில் அரசு நிர்வாகம் மோசமடைந்து வருகிறது. பதவியை காத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர்.
முனிவர் ஓபிஎஸ்
ஓ. பன்னீர்செல்வம் ஏதோ முனிவர் போல பேசுகிறார். ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து பன்னீர்செல்வம் உறுதிமொழி எடுத்திருக்கிறார். ஜெயலலிதா சமாதி என்பது புத்தருக்கு ஞானோதயம் கொடுத்த போதிமரமா?
கருணாநிதி நினைத்திருந்தால்..
இவ்வளவு பலவீனமாக இருந்தாலும்கூட எடப்பாடி பழனிச்சாமி அரசை, ஸ்டாலினாலோ, ஓ. பன்னீர்செல்வத்தினாலோ வீழ்த்த முடியாது. ஒருவேளை, கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக இந்த அரசை வீழ்த்தியிருப்பார். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்தார்.