வந்துட்டார்னு சொல்லு... ரஜினி திரும்ப சென்னைக்கு வந்துட்டார்னு சொல்லு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். கபாலி வெளியாகி கலக்கல் வசூலுடன் ஓடிக் கொண்டுள்ள நிலையில் ரஜினி சென்னை திரும்பியுள்ளார்.
கபாலி படப்பிடிப்பை முடித்த நிலையில் ஷங்கரின் 2 ஓ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் ரஜினி. இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு என்று தகவல்கள் வந்தன.
இதையடுத்து 2ஓ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்.
அங்கு அவர் ஓய்வெடுத்து வந்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இருந்து தந்தையைக் கவனித்துக் கொண்டார். இந்த நிலையில் அமெரிக்காவில் அவர் வாக்கிங் போனது, ஆசிரமம் போனது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ வெளியாகி வைரல் ஆகின.
அமெரிக்காவில் ரஜினி இருந்த சமயத்தில்தான் கபாலியும் வெளியானது. பெரும் பரபரப்புடன் படம் ஓடிக் கொண்டுள்ளநிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய ரஜினிகாந்த்தை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர்கள் ஓடி வந்து சூழ்ந்து கொண்டனர். பலர் அவருடன் இணைந்து செல்பியும் எடுத்தனர்.
அனைவருக்கும் புன்னகையைப் பரிசாக தந்த சூப்பர் ஸ்டார் அனைவருக்கும் கை காட்டி கும்பிட்டு விட்டு தனது காரில் ஏறி வீட்டுக்குக் கிளம்பினார்.