தமிழகத்தை வஞ்சித்த பாஜகவுடன் ரஜினி கூட்டு சேருவாரா?
காவிரி பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜகவில் நடிகர் ரஜினிகாந்த் இணைவாரா மாட்டாரா என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னை: காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக் கொண்டுவிட்டு கடைசி நேரத்தில் தமிழர்களின் காலை வாரிவிட்ட மத்திய பாஜகவில் அதன் தேசிய தலைவர் அமித் ஷாவின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இணைவாரா என்பது மில்லியன் டாலர் கேள்விகளாக உள்ளது.
1996-ஆம் ஆண்டு பாட்ஷா திரைப்பட விழாவில் நடிகர் ரஜினி காந்த், ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு கருத்தை தெரிவித்தது தமிழ்நாட்டில் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. அப்போது திமுக- தமாக கூட்டணியை அவர் ஆதரித்ததால் மாபெரும் வெற்றி பெற்றது.
அன்றைய நாள் முதல் ஒவ்வொரு தேர்தலின் போது ரஜினியின் வாய்ஸுக்காக ஒவ்வொரு கட்சியும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அவர் யாருக்கு ஆதரவு தருவார் என்று காத்து கிடந்தனர்.
நோ கமெண்ட்ஸ்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் அவர் அரசியலுக்கு வரவே இல்லை.ரசிகர்கள், ரஜினிக்கு நெருக்கமானவர்கள் என அனைவரும் தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்று ரஜினிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின் போது அவர் பேச்சிய அரசியல் பேச்சுகள் மூலம் அவர் 70 சதவீத அரசியலில் வர திட்டமிட்டுள்ளார் என்பது நன்றாக தெரிகிறது. இன்னும் அவர் வாயால் அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி.
அமித் ஷா அழைப்பு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய பாதிப்பை சந்திக்கக் கூடும் என்பதால் அவரது பெயரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க மோடி முயன்று வருகிறார். இருப்பினும் அதற்கான சமிக்ஞையை ரஜினி கொடுக்கவில்லை. இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ரஜினிக்காக பாஜகவின் கதவுகள் திறந்திருக்கும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். ரஜினிகாந்தை தங்கள் வலைக்குள் சிக்க வைத்து தமிழகத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டுள்ளது நிதர்சனம்.
தமிழகத்துக்கு வஞ்சம்
தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் காவிரி பிரச்சினை நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்றம் சென்று கர்நாடகத்துக்கு எதிரான தீர்ப்பை பெற்றாலும் கன்னட அமைப்புகள் அங்குள்ள தமிழர்களை அடையாளம் கண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த விவகாரமானது மிகவும் உணர்ச்சிகரமானதாக பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்ற மத்திய பாஜக அரசு அதன் பின்னர் அப்படியே பல்டி அடித்தது. இந்த தீர்ப்புக்காக அங்கு நடந்த கலவரத்தையும் தட்டி கேட்காமல் தமிழக பாஜக வேறு, கர்நாடக பாஜக வேறு என்றே கூறிவந்தது. இதற்கு காரணம், அங்கு இருக்கும் காங்கிரஸ் அரசை வீட்டுக்கு துரத்தி விட்டு பாஜக ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகதான்.
விவசாயிகள் பிரச்சினை
இதேபோல் விவசாயிகள் 41 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிருக்கு லாபகர விலை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு நெஞச்சை உருக்கும் போராட்டங்களை நடத்தியும் மத்திய அரசு விவசாயிகளை துச்சமாக கருதியது. போராட்டத்தின் உச்சகட்டமாக பிரதமர் அலுவலகம் அருகே விவசாயிகள் நிர்வாணமாக ஓடினர். அப்போதும் மத்திய அரசு மௌனம் காத்து வந்தது.
நம்ப வைத்து கழுத்தறுப்பு
தமிழக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தவிர எந்த ஒரு மத்திய அமைச்சரும் இவர்களை வந்து சந்திக்கவில்லை. அதேபோல் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் தமிழக மக்கள் விரோத செயலை பாஜக செய்யாது என்று கூறி மக்களை நம்ப வைத்தனர் கடைசி நேரத்தில் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பனை எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டு தமிழகத்தின் கழுத்தை அறுத்தது.
எத்தனையோ விஷயங்கள்
மீனவர்கள் பிரச்சினைகளிலும் இதே நிலைதான். இலங்கையுடன் நட்பு பாராட்டி வருகிறது மோடி அரசு. இப்படி தமிழகத்துக்கு மட்டும் ஓரவஞ்சனைதான். தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் வெறும் வாய்ஜாலம் கொண்டே கழுவுற மீனில் நழுவுற மீனாகியது பாஜக.
கண்டனக் கணைகள் இல்லை
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோதிலும் மத்திய அரசு ஒரு கண்டனக் கணைகளைக் கூட தொடுக்கவில்லை. இவ்வளவு ஏன் பச்சை தமிழரான ரஜினிகாந்துக்கு பாஜகவில் இணைய பகிரங்கமாக அழைப்பு விடுகிறாரே அமித் ஷா, அவர் கூட கண்டிக்க வில்லை.
ரஜினியின் முடிவு என்ன?
இதே வடமாநிலங்களில் தாக்குதல், போராட்டம், சூறை என்றால் வரிந்து கட்டி கொண்டு அறிக்கை விடுக்கிறார். எல்லாம் போகட்டும், ரஜினியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும். பச்சை தமிழர் என்று கூறிக் கொள்ளும் ரஜினி, தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த பாஜகவுடன் கூட்டு சேருவாரா? இல்லை, தான் நல்லாயிருந்தால் மட்டும் போதுமா தன்னை வாழ வைத்த தெய்வங்களும் நல்லாயிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பேசியதை போல், பாஜகவில் சேராமல் இருப்பாரா? என்பதுதான் எதிர்பார்ப்பாகும்.