அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார் ரஜினி... ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரித்தார்
சென்னை: சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா உடன் ஞாயிறன்று மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இன்று டாக்டர்கள் 25வது நாட்களுக்கும் மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களும் சென்னை அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களும் ஒருங்கிணைந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு லண்டனைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணரான டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே ஆலோசனை வழங்கி வருகிறார். சிங்கப்பூர் மருத்துவர்களும் அப்பல்லோவிற்கு வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக தினமும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அரசியல் தலைவர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி முதல் முன்னாள் ஆளுநர் ரோசய்யா வரை அப்பல்லோவிற்கு வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கடந்த 13ம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் ஜெயலலிதாவை பார்ப்பதற்காக வந்தார். அங்கிருந்த சசிகலாவிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவரிடம் சசிகலா, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் ஞாயிறன்று மாலை 6.35 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவர் முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவர்கள் இருவரும் ஒரே காரில் வந்து சென்றனர். செய்தியாளர்கள் யாரையும் அவர்கள் சந்திக்கவில்லை.
அப்பலோவில் அமைச்சர்கள் மற்றும் மருத்துவர்களுடன் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், " அன்புள்ள சி.எம். அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார் இந்த நிலையில் அவர் நேரில் வந்து முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்து சென்றுள்ளார்.
ரஜினிகாந்தின் வருகை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. ரஜினி வந்து சென்ற பின்னரே ஊடகங்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது.