வைகோ, திருமாவளவன் கொடுத்த அழுத்தத்தால் ரஜினி இலங்கைக்கு செல்லவில்லை: எச்.ராஜா குற்றச்சாட்டு
வைகோ, திருமாவளவன் கொடுத்த அழுத்தத்தால் ரஜினி இலங்கைக்கு செல்லவில்லை என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
சென்னை: வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் தங்கள் அரசியல் லாபத்துக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும் ரஜினிகாந்த் இலங்கை செல்லவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது அரசியல் நாகரிகமற்றது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள வவுனியா பகுதியில் லைக்கா நிறுவனம் சார்பில் தமிழர்களுக்கு கட்டப்பட்டுள்ள வீடுகளை வழங்கும் நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக ரஜினிகாந்த் அறிவித்தார்.
இதுகுறித்து பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது: ரஜினிகாந்த் இலங்கைக்கு போவதாக இருந்தது பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கு தான். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்வதில் எந்த தவறும் இல்லை.
வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் தங்கள் அரசியல் லாபத்துக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும் ரஜினிகாந்த் இலங்கை செல்லவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது அரசியல் நாகரிகமற்றது.
ரஜினிகாந்தின் பயணத்தை அவர்கள் அரசியல் ஆக்கி இருக்கக்கூடாது. ரஜினிகாந்தும் அவர்களுடைய பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கக்கூடாது. ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது, அவரை சந்தித்து பரிசு பொருட்கள் பெற்றவர் தான் இந்த திருமாவளவன்.
எனவே ரஜினிகாந்த் இலங்கை செல்லவேண்டாம் என்று கருத்து கூறுவதற்கு வைகோ, திருமாவளவன் போன்றவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. இந்த சூழ்நிலையிலும் ரஜினிகாந்தின் உணர்வையும், அவர் எடுத்த முடிவையும் நான் மதிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.