பாஜக வலையில் விழுந்துவிட்டாரா ரஜினி? ரசிகர்கள் மத்தியில் அப்படி பேச காரணம் என்ன?
சென்னை: திரைப்படங்கள் ரிலீசாகும் நேரத்தில் ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை தூண்டிவிட்டபடியே இருப்பது ரஜினியின் வாடிக்கை என்ற விமர்சனத்திற்கு இன்று மீண்டும் கமா வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
பெரும் பட்ஜெட்டில் ஷங்கர் இயக்கத்தில் 2.O திரைப்படம் வெளியாகும் தருணம் நெருங்கும் நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு ரஜினி தனது ரசிகர்களை சந்திப்பதாக அறிவித்தபோதே இந்த சந்தேகம் வலுப்பெற்றது.
போட்டோ எடுத்துக்கொள்வதாக கூறி, ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், இன்றும் சம்மந்தம் இல்லாவிட்டாலும் அரசியல் குறித்து பேசினார். தனது பெயரை சொல்லி ஓட்டு கேட்போரை நம்ப வேண்டாம் என்று கூறியது மட்டுமே சம கால சூழலுக்கு பொருத்தமானதாக இருந்தது.
இரண்டாவது தலைமுறை
மற்றபடி ரஜினிகாந்த் பேசியது, 2 தலைமுறைகளாக தமிழக ரசிகர்கள் காது புளிக்க, புளிக்க கேட்டு பழகிய வசனங்கள்தான். அரசியல் குறித்து பேசிய ரஜினி,முதலைகள் இருக்கிறது என தெரிந்தும் காலை வைக்க கூடாது என கூறினார். அடடே, முதல்முறையாக ஓபனாக அரசியலுக்கு வரமாட்டேன் என ரஜினி கூறிவிட்டார். இனி ரசிகர்கள் தங்கள் வேலையை பார்ப்பார்கள் என நினைத்திருந்தவர்களுக்கு பிறகு ரஜினி பேசியது அதிர்ச்சி ரகம்.
குழப்பம்
"இன்று நான் நடிகன், நாளை நான் யார்? என்பதை கடவுளே முடிவு செய்வார்" என்ற ரஜினியின் பேச்சு, அவர் இன்னும் அப்படியேத்தான் தனது ரசிகர்களை பயன்படுத்துகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டது.
கொந்தளிப்பு
இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு எதிராக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களை தொடர்ந்து இந்த வார்த்தையால் ரஜினி கட்டுப்போட்டு வைத்துள்ளார் என்பது நெட்டிசன்கள் ஆதங்கம். தனது 90களின் திரைப்படங்களில் பாடல்கள், வசனங்கள் வாயிலாக அரசியலுக்கு வரப்போவதாக தொடர்ந்து பூச்சு காட்டியபடியே இருந்தவர் ரஜினி. அப்போதைய மேடைப் பேச்சுகளிலும் அது எதிரொலித்தது. சமீபகாலங்களாக அது கொஞ்சம் குறைந்திருந்தது.
எத்தனை வருஷம்ப்பா
இந்த நிலையில் மேடைப்பேச்சில் ரஜினி இன்று மீண்டும் பூடகமாக பேசியுள்ளது நடுநிலையாளர்களை யோசிக்க வைத்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா என யாரேனும் கேட்கக் கூடும். இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால், ஒரு முடிவை எடுக்க இத்தனை ஆண்டுகளாகவா ஒரு மனிதர் காத்திருக்க வேண்டும்? எத்தனை ஆண்டுகளாகத்தான் இதையே அவர் கூற வேண்டும்? அப்படியானால் இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பதே நடுநிலையாளர்கள் கேள்வி.
வலையில் விழுந்துவிட்டாரா
ரஜினி, ஓ.பன்னீர்செல்வம் போன்றோரை தங்கள் கட்சியின் முகங்களாக காட்ட பாஜக தொடர்ந்து முயற்சிக்கிறது. களத்தில் கட்சியை வலுப்படுத்தாமல், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் முயற்சிக்கு ரஜினி இணங்கிவிட்டாரோ என சந்தேகம் எழுப்புகிறார்கள் நெட்டிசன்கள். கருணாநிதி முதுமையால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளார். மற்றொரு ஆளுமையான ஜெயலலிதா இல்லை. மாற்று தலைவராக பார்க்கப்பட்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார். பெரும் வெற்றிடம் உருவாகியுள்ள தமிழக அரசியல் களம் மீது ரஜினிக்கும் ஆசை வந்துவிட்டதோ? அப்படியே வந்தாலும் இப்போது வெளியே உடைத்து கூறிவிட வேண்டியதுதானே? என்பதுதான் ரசிகர்கள் மனதில் உள்ள கேள்வி.