சிவாஜிக்கு மணிமண்டபம்.. முதல்வருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு மற்றும் தமிழ்த்திரையுலகம் பாராட்டு
சென்னை : மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்-அமைசசர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளதற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சிவாஜி கணேசனுக்கு சென்னையில், தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், மதிப்புக்குரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்ட முன் வந்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே போன்று சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபுவும் தமிழக அரசை பாராட்டியுள்ளார்.
நடிகர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்- அமைச்சர் அறிவித்து இருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள்.
எங்களின் உச்சியை குளிர வைத்த முதலமைச்சருக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம் பிரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
மறைந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதாக முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பிலும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் சங்க சரித்திரத்தில் உங்களது செயல் சாதனையாக என்றும் போற்றப்படும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.தாணு மற்றும் நிர்வாகிகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
''தமிழ் திரைப்பட துறை மீது என்றென்றும் பாசமும், பற்றும் கொண்ட தமிழ் திரையுலகின் தவப்புதல்வி முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே எண்ணற்ற பல சலுகைகளை தமிழ் திரையுலகுக்காக செய்து வருகிறார்கள். இன்று மேலும் ஒரு வரப்பிரசாதமாக, உடல் மறைந்தாலும், தமிழர்களின் உள்ளத்தில் என்றென்றும் நீங்காமல் குடிகொண்டுள்ள நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் தமிழக அரசு சார்பில் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இது தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு தமிழக மக்களையும் மகிழ்விக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. தமிழ் திரையுலகின் மீது அக்கறையும், பாசமும் கொண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.