'என்ன'தான் வேண்டும் என்று கேட்டால் 'எண்ண'தான் வேண்டும் என்கிறாரா ரஜினி?
சென்னை: என்னதான் வேணும் என்பதற்கு எண்ணதான் வேண்டும் என கூறும் காமெடி காட்சியை போல நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ரசிகர்களுடனான சந்திப்பின்போது அரசியல் மசாலாவை தூவிவிட்டு போன பேச்சு இதற்கு காரணம்.
ஆனால், இதன்பிறகு, அரசியல் தொடர்பாக மேற்கொண்டு பேசுவதை ரஜினி தவிர்த்து வருகிறார். மறுபக்கமோ கஸ்தூரி முதல், அர்ஜுன் சம்பத் வரை பலரையும் தனது இல்லத்தில் சந்தித்து பேசிக்கொண்டுள்ளார்.
குழப்பம்
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் ரஜினிகாந்த்திடம் எப்போது கேட்டாலும், அரசியல் வேண்டாமே.. என்பதுதான் பதிலாக உள்ளது. இதனால் பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் குழம்பிக்கொண்டுள்ளனர்.
நிருபர்கள்
இந்த நிலையில்தான், சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அரசியல் பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
வரநினைத்தால்
இதற்கு ரஜினிகாந்த் பதிலளித்து கூறுகையில், நான் அரசியலுக்கு வர நினைத்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்வேன் என்று கூறினார் ரஜினிகாந்த். அதாவது தற்போது நடிகர் மட்டுமே என்பதால் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்க தேவையில்லை என்ற தொனியில் அவர் தெரிவித்தார்.
பேசிக்கொண்டிருக்கிறேன்
அப்படியும் விடாத நிருபர்கள், நீங்கள் அரசியலுக்கு வருவதாக கூறியிருக்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு, ரஜினியோ, நான் அப்படிச்சொல்லவில்லை. அரசியலுக்கு வருவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன். அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்தால் அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
காமெடி ஷோ
அரசியலுக்கு வருவதாக தெரிகிறதே என்ற கேள்விக்கு நான் அரசியலுக்கு வருவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என பதிலளித்துள்ளார் ரஜினி. இதன்மூலம், கேட்ட கேள்விக்கு அதே கேள்வியை விடையாக்கி மேற்சொன்ன அந்த 'எண்ணை' காமெடியை நினைவூட்டியுள்ளார் ரஜினி. அவரே ஒப்புக்கொண்டபடி, அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் உள்ள ஒருவர் ஏன், அரசியலை பற்றி மட்டும் பேச மறுக்கிறார் என்பதே எஞ்சி நிற்கும் கேள்வி.