ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார்.. யாருடனும் சேர மாட்டார்.. அர்ஜுன் சம்பத் திட்டவட்டம்
நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார். யாருடனும் சேர மாட்டார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று காலை 10.30 மணி அளவில் சென்றார். அங்கு அவர் ரஜினியுடன் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர், வெளியே வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
விரைவில் அறிவிப்பு
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்பது என் கணிப்பு. அதற்கான முழு தயாரிப்புகளை அவர் செய்து கொண்டிருக்கிறார். அரசியலுக்கு அவர் வருவது குறித்து அதிகார பூர்வமாக விரைவில் அறிவிப்பார்.
இந்து மக்கள் கட்சி ஆதரவு
நாங்கள் ரஜினியை சந்தித்து எங்களது வேண்டுகோளை வைத்துள்ளோம். அவர் அரசியலுக்கு வந்தால் துணை நிற்போம். மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவோம். கழகங்கள் இல்லா தமிழகத்தை கொண்டு வருவோம்.
தமிழகத்திற்காக குரல் கொடுத்தவர்
தமிழக நலன்களுக்காக எந்தெந்த நேரத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ அந்தந்த நேரத்தில் எல்லாம் ரஜினி குரல் கொடுத்துள்ளார். 1996ல் ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிற கருத்தை தெரிவித்து ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டார்.
தனிக்கட்சிதான் தொடங்குவார்
நிச்சயமாக அரசியலுக்கு அவர் வர வேண்டிய தருணம் இது. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அவர் தனிக்கட்சிதான் தொடங்குவார். அவர் தனிக்கட்சி தொடங்கினால்தான் நல்லது செய்ய முடியும். இன்னொருவரின் தலைமையின் கீழ் இருந்து அவரது கனவுத் திட்டமான நதி நீர் இணைப்பை செய்ய முடியாது என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.