இந்தியர் என்ற தகுதி போதும்.. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்.. நடிகர் செந்தில்
நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று நடிகர் செந்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்தியர் என்பதால் அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று நடிகர் செந்தில் தெரிவித்தார்.
கடந்த மாதம் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அரசியலுக்கு வருவது போன்று அவரது பேச்சுகள் இடம்பெற்றன. சுமார் 5 நாள்கள் 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த அவரது கடைசி நாள் பேச்சு பெரும் புயலை கிளப்பியது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், அரசியல் கட்சித் தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் தெரிவித்தார். மேலும் போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்ற ரஜினியின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அரசியல் நிலை
இதற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னும் பலர் ரஜினி அரசியலுக்கு வருவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் நிலை தற்போது தாறுமாறாக மாறியுள்ளது.
பாஜக ஆதரவு போக்கு
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த அரசு செயலற்று உள்ளதாகவும், 4 ஆண்டுகள் ஆட்சி நடத்த பாஜகவின் தயவு தேவை என்பதால் பாஜக அரசின் திட்டங்களுக்கு ஆமாம் சாமி போட்டனர்.
தினகரனை ஒதுக்கி வைத்து...
இதனிடையே, இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் வெளியே தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் பேசியதை தொடர்ந்து தினகரனுக்கு 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தினகரனுடன் சந்திப்பு
இதனால் எடப்பாடி அரசு தனது பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனை நடிகர் செந்தில் சந்தித்து பேசினார்.
ரஜினி இந்தியர்
அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் இப்போதுள்ள நிலைமையே இருந்தால் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும். அவர் இந்தியர். கட்சியில் ஒற்றுமை இல்லை எனில், அவ்வளவுதான். அனைத்து பதவிகளையும் எல்லா எம்எல்ஏ-க்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்றார் அவர்.