பக்கா திட்டமிடல், கொள்கைகள், மக்களுக்கான திட்டங்களுடன் தயாராகிறது ரஜினி கட்சி!
ரஜினிகாந்தின் புதிய கட்சிக்கான அடிப்படை வேலைகள் கன ஜோராக நடந்து வருகின்றன. விரைவில் கட்சி, கொள்கைகள் குறித்து அவரே அறிவிக்கவிருக்கிறார்.
ரஜினிகாந்த் தன் பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும், வெளியில் என்ன நடக்கிறது, அரசியல் களம் எப்படி உள்ளது என்பதையெல்லாம் கவனித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் தனக்கு நம்பிக்கையானவர்கள் மூலம் கட்சி துவங்குவதற்கான பூர்வாங்க வேலைகளையும் அவர் நிதானத்துடன், அதே நேரம் சரியான திட்டமிடலுடன் செய்து வருகிறார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கட்சி
போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று ரசிகர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் அறிவித்த பிறகு, கடந்த 2 மாதங்களாக அதை வைத்தே அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டுள்ளது. ஆனால் அதன் பிறகு ரஜினிகாந்த் வெளிப்படையாக எதுவும் சொல்லாவிட்டாலும், அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் ரஜினியின் புதிய அரசியல் கட்சி குறித்து உறுதியாகப் பேசி வருகின்றனர்.
தமிழருவி மணியன்
குறிப்பாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினியுடன் தாங்கள் கூட்டணி வைத்துவிட்டதாகவே அறிவித்துள்ளார். அவரது கட்சி வகும் ஆகஸ்ட் 20-ம் தேதி திருச்சியில் நடத்தும் மாநாடே ரஜினியின் அரசியல் வருகையை அறிவிக்கும் கூட்டம்தான் என வெளிப்படையாக தெரிவித்துள்ளாரே.
மாநாடு
ரஜினி எதற்காக அரசியலுக்கு வருகிறார்? ரஜினி அரசியலில் தமிழக மக்களுக்கு என்ன கிடைக்கும்? அவரது கொள்கைகள் என்ன? என்பதையெல்லாம் தமிழருவி மணியன் அந்த மாநாட்டில் பேசப் போவதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இது ரஜினி ரசிகர்களுக்கான மாநாடாகவே பார்க்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள ரசிகர்களும் தயாராகி வருகின்றனர்.
ஏற்பாடுகள்
இன்னொரு பக்கம், வெறும் பேச்சாக இல்லாமல், தனது அரசியல் இயக்கம், மக்களுக்காக வைத்துள்ள திட்டங்கள், கொள்கைகள் அனைத்தையும் தனக்கு மிக நம்பிக்கையான நபர்கள் மூலம் ரஜினி உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
கட்சி பெயர் ரெடி
கட்சியின் பெயர், கொடி போன்றவற்றையும் ரஜினி இறுதி செய்துவிட்டதாகவும், சரியான தருணத்தில் அவற்றை அறிவிப்பார் என்றும் ரஜினி வட்டாரத்தில் கூறப்படுகிறது.