ராஜ்யசபா தேர்தல்: 4 அதிமுக வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல்!
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 4 பேர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை கட்சித் தலைவரான நவநீதகிருஷ்ணன், ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் கட்சியின் சுதர்சன நாச்சியப்பன், திமுகவை சேர்ந்த கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் ஜூன் 11ம் தேதி அந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் தவிர்த்து எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், வைத்திலிங்கம், விஜயகுமார் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
வேட்புமனு
மாநிலங்களை தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர் 4 பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் வேட்புமனுக்களை சட்டசபை செயலாளர் ஜமாலுத்தீனிடம் அளித்தனர்.
எஸ்.ஆர்.பி.
தமிழ் மாநில காங்கிரஸில் இருந்த மூத்த தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவுக்கு தாவினார். அண்மையில் அதிமுகவுக்கு வந்த அவருக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
வைத்திலிங்கம்
சட்டசபை தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் ராமச்சந்திரனிடம் 3 ஆயிரத்து 642 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆர். வைத்திலிங்கத்திற்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.