புனித ரமலான்... தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம் - வீடியோ
புனித ரமலான் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
சென்னை: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக நாடு முழுவதுமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பண்டிகை களை கட்டியுள்ளது. சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் சிறப்பு கூட்டுத்தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டிணம் கடற்கரையில் புனித ரமலான் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற ரமலான் தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபட்டனர். காயிதே மில்லத் திடலில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி வழிபட்டனர். பின்னர், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இதேபோல் மாநிலம் முழுவதும் பெரும்பாலான பள்ளிவாசல்களில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.