பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக அரசு மாறிவிட்டது.. ராமதாஸ் கடும் தாக்கு
பண்ருட்டி: தமிழகத்தில் பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக அரசு மாறிவிட்டது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த 2011- ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் சபா.ராஜேந்திரன் போட்டியிட்டார்.
அவரை ஆதரித்து திமுக தமிழர் பேரவை பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன், பாமக தலைவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முன்னாள் எம்எல்ஏ தி.வேல்முருகன், முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, திரைப்பட நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.
இதில், அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் பிரசாரம் செய்தது உள்ளிட்ட காரணங்கள் தொடர்பாக, பண்ருட்டி போலீஸாரால் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து, பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாஸ் நேற்று பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், தமிழகத்தில் பாஜகவின் ஊதுகுழலாக அ.தி.மு.க. அரசு மாறிவிட்டது. பாஜகவின் பினாமியாகவும் உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக முதல்-அமைச்சர் மற்றும் 6 அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் இதுவரையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஜனாதிபதி தேர்தலில் பாமக யாரை ஆதரிக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்றார்.